பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

என் சரித்திரம்

நான்மணி மாலை

தாம் தேசிகர் மீது இயற்றி அச்சிட்டுக் கொணர்ந்த நான்மணி மாலையை அன்று பிற்பகலில் பண்டிதர் மடத்திற் படித்துப் பிரசங்கம் செய்தார். அப்போது தம்பிரான்களும், வேறு மாணாக்கர்களும், மதுரை இராமசாமி பிள்ளையும், சில வித்துவான்களும் இருந்தார்கள். அப்பிரபந்தத்தில் செய்யுள்தோறும் சுப்பிரமணிய தேசிகருடைய பெயர் வரவில்லை. அது முறையன்றென்று தம்பிரான்கள் ஆட்சேபம் செய்தார்கள். அப்போது அங்கே வந்திருந்த கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல் ஸம்ஸ்கிருத பண்டிதர் சடகோபாசாரியரென்பவர் அவரை நோக்கி, “என்ன, பதில் சொல்லாமலிருக்கிறீர்களே? இந்த நூலை எடுத்துக் கொண்டு போய் மற்றோர் ஆதீனத்தில் இதே பாட்டைப் படித்துக் காட்டலாமே. இந்த ஆதீனகர்த்தரைப் பற்றியதுதானென்பதற்கு ஒவ்வொரு பாட்டிலும் அடையாளம் இருக்க வேண்டாமோ?” என்று கேட்டார். அப்படி அவர் வெட்டெனப் பேசியதைக் கேட்டபோது எனக்கே மிக்க வருத்தமுண்டாயிற்று. கவிராஜ பண்டிதரோ பொறுமையோடு பேசாமலிருந்து விட்டார். அந்தத் தடைக்கு விடை சொல்லும் ஆற்றல் அவருக்கு இருந்தாலும் அனாவசியமாக விவாதத்தைக் கிளப்ப அவர் விரும்பவில்லை.

பாராட்டு பாடல்

நான்மணிமாலை முற்றும் பிரசங்கம் செய்து நிறைவேறியது. மறுநாள் பண்டிதர் தேசிகர் மீது பல புதிய பாடல்களை இயற்றிச் சொல்லிக் காட்டினார். அவரைப் பாராட்டி அப்போது பின்வரும் பாடலை நான் சொன்னேன்:-

“வற்றா வருட்சுப் பிரமணி யப்பெயர் வள்ளல் மலர்ப்
பொற்றாட் புகழைப்பல் பாமாலையாகப் புனைந்தழகாச்
சொற்றா னியற்சந் திரசே கரபண்டித சுகுணன்
சற்றாய் பவர்களும் முற்றா மகிழ்வு தலைக்கொளவே.”

சுப்பரிமணிய தேசிகர் தம் ஸந்தோஷத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

“நேமிநா தன்வழுத்தும் நித்தன் கைலையுறை
வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல்-தோமினற்சீர்
சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல்
பாமினா ளும்பகர் வளோ”

என்ற செய்யுளைச் சொன்னார்.