பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432

என் சரித்திரம்

அமைந்தமையால், “இனி இவர் இங்கிருந்து போகமாட்டார்” என்ற நினைவே அவர்களுடைய திருப்திக்குக் காரணமாயிற்று.

தந்தையாரின் பொழுது போக்கு

என் தகப்பனாரோ எல்லாக் கவலைகளையும் மறந்து சிவ பூஜை செய்து கொண்டும், கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டும் சந்தோஷமாகப் பொழுது போக்கி வந்தார். ஒரு பயனை எதிர்பார்த்துப் பாடும் அவசியம் ஒழிந்தது. அவருக்கு எப்பொழுது ஓய்வும் உத்ஸாகமும் உண்டோ அப்பொழுதெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார். மடத்தில் யாரேனும் சங்கீத வித்துவான்கள் வந்தால் அவரைப் பார்த்து விட்டுச் செல்வது ஒரு வழக்கமாயிற்று. மடத்தில் வினிகை நடைபெறுவதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என் தந்தையாரை அழைத்து வரச் சொல்லிக் கேட்கச் செய்வார்.

மகா வைத்தியநாதையர், திருக்கோடிகா கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் வரும்போதெல்லாம் என் தந்தையாரைப் பாராமல் போகமாட்டார்கள். புதுக்கோட்டையிலிருந்து தியாகராஜ சாஸ்திரிகள் வந்து சுப்பிரமணிய தேசிகரிடம் பேசிவரும்போது திடீரென்று, “சரி; நான் அங்கே போய் அவர்களிடம் இரண்டு கீர்த்தனங்கள் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டுவிடுவார். “அதைச் சொல்லுங்கள்; இதைச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பார். கேட்பதோடு நிற்கமாட்டார்; ஒவ்வொன்றையும் வாயாரப் பாராட்டுவார். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களை அவர் பிறரிடம் அதிகமாகக் கேட்டதில்லை யாதலால் பெரும்பாலும் அவற்றையே பாடச் சொல்லிக் கேட்பார். நாயக நாயகி பாவத்திலுள்ள பதங்களைக் கேட்டு, “என்ன அழகு! என்ன மெட்டு!!” என்று கொண்டாடுவார்.

திருக்கோடிகா கிருஷ்ணையர் சிறந்த பிடில் வித்துவான். மகா வைத்தியநாதையருக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். அவர் என் பிதாவிடம் கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்கள் பலவற்றை அறிந்து பாடம் பண்ணிக்கொண்டார். திருவாவடுதுறையில் இருந்த நாகசுர வித்துவானாகிய குழந்தை வேலனென்பவனும் சில சிறந்த கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிக்கொண்டு நாகசுரத்தில் வாசித்தான். அவற்றை அவன் வாசிக்கும்போது அவை புதிய பாணியில் இருப்பதை அறிந்த ரஸிகர்கள் என் தந்தையாரிடமிருந்து அவை அவனுக்குக் கிடைத்தன என்பதை விசாரித்தறிந்து அவரிடம் வந்து சில கீர்த்தனங்களைக் கேட்டு உவப்பார்கள். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களுக்குப் புதிய ‘கிராக்கி’ ஏற்பட்டது.