பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனையில்‌ வெற்றி

491

“கோபால ராவ் அவர்களைப் பார்க்கவா?” என்று கேட்டேன்.

“அவர் மூலமூர்த்தி. அவரைப் பார்ப்பதற்கு முன் பரிவார தெய்வங்களைப் பார்க்கவேண்டும்” என்றார் அவர்.

காலேஜில் பிரின்ஸிபாலுக்கு அடுத்த பதவியை வகித்த ஸாது சேஷையர் வீட்டுக்குச் சென்று இறங்கினோம். புஸ்தகங்களை அவர் வீட்டு மெத்தையில் அவர் உள்ள இடத்திலிருந்த ஒரு பெரிய வட்ட மேஜையின் மேல் வைக்கச் செய்தார். சேஷையர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். செட்டியார் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து “என் வேலைக்கு நான் குறிப்பிட்டவரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் இவ்விடம் வந்து நேரில் பரீக்ஷை செய்து நான் அவரைப் பற்றிச் சொன்னது உண்மை தானா வென்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்று எழுதி ஓர் உறையிலே போட்டுக் காலேஜ் ஆசிரியர்களாகிய ஆர். வி. ஸ்ரீநிவாஸையர் முதலியவர்களிடம் காட்டி வரும்படி ஒருவரை அனுப்பினார். அவற்றையெல்லாம் கவனித்த எனக்குச் செட்டியார் ஏதோ ஒரு பெரிய சபைகூட்ட ஏற்பாடு செய்வதாகத் தோற்றியது.

சிறிது நேரத்தில் ஆர் . வி. ஸ்ரீநிவாஸையர் வேறு ஆசிரியர்கள் சிலருடன் அங்கு வந்து சேர்ந்தார். புறத்தே சென்றிருந்த சேஷையரும் வந்து விட்டார். வந்தவுடன் தமது மேஜையின்மேல் உள்ள மூட்டைகளைக் கவனித்து, “இவை என்ன?” என்று கேட்டார்.

“எல்லாம் தமிழ்ப் புஸ்தகங்கள்” என்றார் செட்டியார். பிறகு என்னையும் அறிமுகம் செய்வித்தார்.

வந்த ஆசிரியர்களுள் ஒருவர் “தமிழ்ப் புஸ்தகங்கள் இவ்வளவு உள்ளனவா?” என்று கேட்டார்.

செட்டியார், “இன்னும் எவ்வளவோ உண்டு. அச்சில் வாராத ஏட்டுப் புஸ்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன” என்று கூறி அவருடைய வியப்பைப் பின்னும் அதிகமாக்கினார்.

வேறொருவர், “இவை என்ன என்ன புஸ்தகங்கள்? எதற்காக இவ்வளவு?” என்று கேட்டார்.

“கந்தபுராணம், கம்பராமாயணம், பாரதம், நைடதம் முதலிய காவியங்களும், பல பிரபந்தங்களும், ஸ்தலபுராணங்களும், நன்னூல் முதலிய இலக்கணங்களும் உள்ளன. இப்புஸ்தகங்களில் யார் யாருக்கு எது எது இஷ்டமோ அதைப் பிரித்து எடுத்து இவரிடம் கொடுத்து விஷயத்தையும் சந்தர்ப்பத்தையும், பொருளையும்