பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

என் சரித்திரம்

துயரம்-மிக்க துன்பத்தை. கால் துயரம்-காற்றினால் உண்டான துயரம்; காற்பங்காகிய துயரம்.)

“உரம்பயிலும் பலமரமு மரம்பையுமிக் காற்றினால்
     ஒடிந்து சாய்ந்த
வரம்பையறு காலுதையா லெவ்வுயிருந் தலைசாய்தல்
     மரபா மன்றோ
சிரம்பயிலும் பந்தருறும் பலகாலிவ் வொருகாலிற்
     சிதைந்து வீழ்ந்த
தரம்பயிலீ ததிசயங்கொ லொன்றுபல வற்றைவெலல்
     சகச மன்றோ.”

(அரம்பை-வாழை. கால் உதையால்-காற்று அடித்தலினால், காலால் உதைத்தலால். பந்தருறும் பலகால்-பந்தலிலேயுள்ளபலகால்கள். ஒரு காலில்-ஒரு காற்றால்; ஒற்றைக் காலால்.)

“இப்படியே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு பாடல் இயற்றுவது மேல் நாட்டார் வழக்கம்” என்று அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல்களில் கருத்தைக் காட்டிலும் பதங்களின் சமற்காரம் அதிகமாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் படித்தும் கேட்டும் அக்காலத்தினர் மிக்க இன்புற்றார்கள்.

திருப்பனந்தாள் தலைவர் பாராட்டு

திருப்பனந்தாளில் காசி மடத்துத் தலைவராக இருந்த இராமலிங்கத் தம்பிரானை ஒரு சமயம் கண்டு எனக்கு வேலையானதைத் தெரிவித்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லவே நான் ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் சென்று அவரோடு சல்லாபம் செய்து இருந்து வந்தேன். அவர், “உங்கள் தந்தையார் செய்த பூஜா பலன். பிள்ளையவர்கள் உங்கள் பால் வைத்த அன்பு வீண்போகவில்லை. தியாகராசசெட்டியார் மூலமாக அது பயனளித்தது” என்று பாராட்டினார்.

சில மாதங்களுக்குப் பிறகு இராமலிங்கத் தம்பிரான் தமக்கு இளவரசாக என் நண்பரும் திருவாவடுதுறையாதீன வித்துவானாக இருந்தவருமான குமாரசாமித் தம்பிரானை நியமித்தார்.அந்தச் செய்தி தெரிந்தபோது எனக்கு உண்டான சந்தோஷம் அளவு கடந்து நின்றது. உடனே திருப்பனந்தாள் சென்று அவரைப்பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருந்தேன். சந்தர்ப்பம் கிடைத்தவுடன் போய்ப் பார்த்து என் சந்தோஷத்தைத் தெரிவித்து வந்தேன்.