பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

[திருத்தகுமா முனிவன் - திருத்தக்க தேவர் திருவிலாதேன் - பொருளில்லாத வறியவனாகிய யான்.]

3. “ஆயினுநின் அன்புடைமை யென்னளவு மகலாதென்
           றகத்திற் கொண்டே
     தாயினுமன் பமைந்திலகு மிராமசா மிக்குரிசில்
           தன்பாற் பின்னர்
     மேயினனின் பால்விளம்ப வெண்ணியவெலா மவன்பால்
           விளம்பி வந்தேன்
     நீயிரிரு வீர்களுமோர் மனமுடையீ ரென்பதனை
           நினைந்தே மன்னோ.”
[மேயினன் - சென்றேன்.]

4. “இது பொழுதி லெனக்கின்றி யமையாத தின்னதென
            இயல்பா லோர்ந்த
     மதுவிரவுந் தொடப்புயத்து வள்ளலே வெளிப்படையா
            வழங்க வென்னெஞ்
     சதுதுணிவுற் றிலதானின் றிருமுகமாற் றங்கேட்கும்
            ஆசை யேற்குக்
     கதுமெனவே மகிழ்வுமிக நினதுதிரு முகமாற்றம்
            காணச் செய்யே.”

[தொடை - மாலை திருமுக மாற்றம் - வாய்ச் சொல், கடித வாக்கியம் கதுமென - விரைவில்]

கடிதம் எழுதி இரண்டு நாளுக்குப் பின் நான் எதிர்பார்த்தபடியே அரங்கநாத முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஏழு பாடல்களும் ஒரு குறிப்பும் ஐம்பது ரூபாய்க்கு ஓர் உண்டியலும் இருந்தன. குறிப்பில் சேலம் இராமசுவாமி முதலியாரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டதாகவும் எழுதியிருந்தார். அவர் பாடல்களில் உண்மையன்பு ததும்பியது.

“அன்றெனைக் காண நயந்தனை யைய
        அமயமொவ் வாமையா லமைவாய்ச்
சென்றனை நின்னைக் கண்டிலாக் குறைய
        தென்னதே சிற்றறி வுடையேன்
ஒன்றல பலவாம் பிழைசெயத் தகுமே
        உத்தம குணமொருங் குடையாய்
கன்றினைக் காராக் களியுறக் காக்கும்
        கனிவொடு கமித்தனின் கடனே.”

[நயந்தனை - விரும்பினை. அமயம் - சமயம் காரா – கார் காலத்திற்குரிய பசு; ஒருவகைப் பசு, கமித்தல் - பொறுத்தல்]