பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துள்ளினார். “உங்கள் பாக்கியமே பாக்கியம்!” என்று பாராட்டினார். “நான் செட்டியாரைப் போய்ப் பார்க்கப் போகிறேன்” என்றேன். ஸ்ரீநிவாச பிள்ளை, தியாகராச செட்டியாரிடம் பாடம் கேட்டவர்; தெய்வம் போல அவரை மதிப்பவர். ஆதலின் உடனே, “அவசியம் செய்ய வேண்டும்; இதன் அருமையையும், உங்கள் அருமையையும் அவரே பாராட்டவேண்டும்” என்று சொல்லி விடை கொடுத்தார். நான் திருச்சிராப்பள்ளியை நோக்கிப் புறப்பட்டேன்.


அத்தியாயம்—102

அடுத்த நூல்

சிந்தாமணியை நான் அச்சிட்டு வந்த காலத்தில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று அந்தப் பள்ளிக்கூடத்து அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். என்னிடம் பாடம் கேட்டவரும் சில காலம் திருவாவடுதுறையில் இருந்தவருமான சிதம்பரம் மு. சாமிநாதையரென்பவரை அனுப்பினேன்.

[1]ம. வீ. ராமானுஜாசாரியர்

அவர் அவ்வேலையை ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளிக்கூட சம்பந்தமான அதிகாரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும் திருப்தியுண்டாகும்படி நடந்து வந்தார். அவர் சிந்தாமணிப் பதிப்புக்குச் சிலரிடம் கையொப்பம் வாங்கித் தந்தார். கௌரவமாக எல்லாரோடும் பழகிவந்த அவர் சில அசௌகரியங்களால் வேலையை விட்டு விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வேறு ஊருக்குப் போய் விட்டார். அப்பொழுது அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்தல் அவசியமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து வேறொரு தக்க பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று சொன்னார். திருமானூர் அ. கிருஷ்ணையரை அவ்வேலையில் நியமிக்கச் செய்யலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் அப்போது சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாகச் சென்னையில் இருந்து வந்தமையால் சில காலம் வேறு ஒருவரைப் பார்த்துவரச் செய்யலாமென்று நிச்சயித்தேன்.


  1. மகா பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டவரும் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராயிருந்தவருமான காலஞ் சென்ற மகா மகோபாத்தியாய ம. வீ. ராமானுஜாசாரியார் இவரே.