பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

636

என் சரித்திரம்

இந்த நிலையில் திருத்தமில்லாதனவும் மூலமில்லாதனவுமாகிய பிரதிகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதைவிட இன்னும் சில நல்ல பிரதிகளைத் தேடித் தொகுத்து ஆராயலாமென்ற கருத்தினால் அவ்வருஷம் மே மாதம் திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட எண்ணினேன்

திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் சொல்லி விடை பெற்றேன். அவர் என்னிடம் மிக்க அன்பு பாராட்டி உடனே திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்ததாக உள்ள ஈசான மடத்திலிருந்த ஸ்ரீ சாமிநாதத் தம்பிரானுக்கு, நான் வந்தால் வேண்டியவற்றைக் கவனித்து உதவும்படி உத்தரவு அனுப்பினார். என் வரவைக் குறித்துக் கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளைக்கு முன்பு நேரிற் சொல்லியபடி நான் கடிதம் எழுதினேன்.

ஒரு நல்ல நாளிற் புறப்பட்டுத் திருநெல்வேலிக்குச் சென்று ஈசான மடத்தில் ஜாகை வைத்துக் கொண்டேன். அங்கிருந்த தம்பிரான் எனக்கு வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டார். பிறகு கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளையிடம் போனேன். அவரும் அவர் தமையனாரும் என் வரவை எதிர்பார்த்திருந்தனர். அவர்களோடு சில நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வேறு சில கனவான்களும் அப்பொழுது உடனிருந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களைப் பற்றியும் பிள்ளையவர்கள் புலமையைப் பற்றியும் தமிழ் நூல்களைப் பற்றியும் எங்கள் சம்பாஷணை நடந்தது.

தமிழ்க் கோயில்

அந்த இரண்டு சகோதரர்களும் நல்ல செல்வவான்கள். அவர்கள் செல்வத்தை அவர்கள் குணம் அழகுபடுத்தியது. மூத்தவராகிய கவிராஜ நெல்லையப்ப பிள்ளையின் வீடு தெற்குப் புதுத் தெருவில் உள்ளது. அவ்வீட்டின் முன்புறத்தும் பின்புறத்தும் வாய்க்கால் உண்டு. எப்போதும் ஜலம் ஓடிக்கொண்டேயிருக்கும். வீட்டுக்குப் பின்புறத்தில் பெரிய தோட்டமும் அதில் ஒரு சௌகண்டியும் இருந்தன. அவர் கொடையும் செல்வாக்கும் உடையவர். எப்போதும் அவரைப் பார்க்கப் பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள், சிவபக்தியும் தமிழறிவும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அக்குடும்பத்தில் திருமகள் விலாசம் நன்றாகப் பொருந்தியிருந்தது.

நெல்லையப்பப் பிள்ளையவர்கள் தம் வீட்டில் பூஜை மடத்தை மிகப் பெரியதாகக் கட்டி வைத்திருந்தார். ஒரு வில்வ விருக்ஷத்தை வளர்த்து அதைத் தினந்தோறும் பூஜித்து வந்தார்.