பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைக்‌ கல்வி

51

எனது மூன்றாம் பிராயத்தில் எனக்கு ஒரு சகோதரி பிறந்தாள். அப்பெண்ணுக்குத் தையல்நாயகி என்ற பெயர் வைத்தார்கள். ஸ்திரீகளுக்குப் பெண் குழந்தைகளிடம் அதிக அன்பு இருப்பது உலக இயல்பு. என் அன்னையார் அக்குழந்தையிடம் மிக்க வாத்ஸல்யம் உடையவராக இருந்தார். அந்தக் குழந்தை சில வருஷம் வாழ்ந்திருந்து இறந்து போயிற்று. அப்போது என் தாயார் துடிதுடித்துப் போனார். அந்தக் குழந்தை இறந்த துக்கம் அவருடைய நெஞ்சில் பல வருஷங்கள் ஆறாமல் இருந்தது நான் இளம்பருவத்தில் விஷமம் செய்தபோது சில சமயங்களில் என் தாயார் என்னை அடித்து வைவார். அவ்வாறு வையும் சில சமயங்களில் அவர் கூறும் வார்த்தைகள் இறந்துபோன அக்குழந்தையின்பால் அவருக்கு எவ்வளவு பற்று இருந்ததென்பதைப் புலப்படுத்தும். பெண் குழந்தையை இழந்த குறை என் தாயாருக்குத் தீரவே இல்லை; அந்தக் குழந்தைக்குப் பிறகு எனக்குத் தங்கையே பிறக்கவில்லை.

எனக்கு ஐந்தாம் பிராயம் நடைபெற்ற போது வித்தியாப் பியாசம் செய்வித்தார்கள். என் பாட்டனார் அரிச்சுவடி சொல்லித் தந்தார். முதலில் உத்தமதானபுரத்தில் தெற்கு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் நாராயண ஐய ரென்பவரிடம் சில மாதங்களும், பிறகு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் சாமிநாதைய ரென்பவரிடம் சில வருஷங்களும் படித்தேன். தமிழில் கீழ்வாயிலக்கம். நெல் இலக்கம் முதலியவற்றையும், வடமொழியில் சில நூல்களும் படித்தேன். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் என் பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகியவர்களும் எனக்குக் கற்பித்து வந்தனர்.

அத்தியாயம்—10

இளமைக் கல்வி


முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.