பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற பட்டம்

759

பன்னூற்றிரட்டு

மகா மகத்துக்குப் பாண்டித்துரைத் தேவரும் அவருடைய நண்பரும் சிறந்த தமிழ் வித்துவானுமாகிய வீர. லெ. சிந்நய செட்டியாரும் வந்திருந்தனர். அவ்விருவர்களுடைய சல்லாபத்தாலும் நான் இன்புற்றேன். அப்போதுதான் புறத்திரட்டுப் பிரதியைப் பாண்டித்துரைத் தேவரிடம் சேர்ப்பித்தேன். பலநீதிச் செய்யுட்களை அவர் திரட்டிப் பன்னூற்றிரட்டு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதற்குப் புறத்திரட்டு மிகவும் உதவியாயிருந்ததென்று தெரிய வந்தது.

குமாரனுக்கு விவாகம்

1897-ஆம் வருஷம் ஜுன் மாதம் என் குமாரன் சிரஞ்சீவி கலியாண சுந்தரத்துக்கும் நாகபட்டினத்தில் இருந்த ஸ்ரீ சக்கரபாணி ஐயரென்பவருடைய குமாரி கமலாம்பாளுக்கும் விவாகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் வதூகிருகப் பிரவேசம் நடந்தது. அப்போது அம்பலவாண தேசிகர் முதலியவர்கள் எனக்குப் பல வகையில் உதவி புரிந்தார்கள். என் குமாரனுடைய விவாக தினம் விக்டோரியா மகாராணியாருடைய வைர ஜூபிலிக் கொண்டாட்ட நாள். பல இடங்களிலும் அக்கொண்டாட்டம் நடந்தது. கரூரில் ஜில்லா முன்ஸீபாக இருந்த ஸ்ரீ ஏ. சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் அவ்வூரில் நடந்த வைபவத்துக்கு மகாராணியார் விஷயமாகச் சில பாடல்கள் எழுதி அனுப்ப வேண்டுமென்று விரும்பியபடி எழுதியனுப்பினேன்.

மணிமேகலைப் பதிப்பு

மணிமேகலை மூலமும் அரும்பதவுரை முதலியனவும் 1898-ஆம் வருஷம் ஜுலை மாதத்தில் அச்சிடப் பெற்று நிறைவேறின. முகவுரையும், புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம், மணிமேகலைக் கதைச் சுருக்கம் என்பவையும் முதலில் சேர்க்கப் பெற்றன.

புத்தகம் வெளி வந்து உலாவியபோது எனக்குக் கிடைத்த பாராட்டுக்கள் பல. 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்களை என் குறிப்புரையிற் காட்டியிருந்தேன். இவற்றையன்றி, தமிழ் வடமொழி நூல்களின் உரையாசிரியர்கள் வாக்கிலிருந்து பல செய்திகளை அங்கங்கே கொடுத்தேன். அந்த நூல்களைப் பற்றியும் உரையாசிரியர்களைப் பற்றியும் நான்