பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

முடியரசன்


வரவேற்கிறேன்’ என்று தொல்லைகளுக்கு வரவேற்புக் கூறுகிறார். அதன் பின்னர், ‘இப்போது தமிழன் அத்தனை மோசமில்லை காதைப் பிடித்துத் தூக்கினாலும் கீ என்று கத்துகிறான்’ எனச் சற்று அமைதி கொள்கிறார். அதன் பின்னர், அநேகமாக இன்று தமிழரால் ஒரு புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனி மனிதன் செத்துப் போவான்; ஆனால், நலிந்த ஒரு சாதி சாகாது; எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம்; எனது இன்பக் கனவு - என்று இன்பக் கனவு காணுகிறார். (10.10.1937, குடியரசு இதழ்) நசுக்கப்பட்டுத் தொல்லைப் பட்டுப் பின்னர்ப் பொறுமையிழந்து, கீ என்று கத்தி, அதன் பின் எழுச்சி பெற்று, கறுத்தெழுந்த குயிலின் குரல் எவ்வாறிருக்கும்? கனல் தெறிக்கத் தானே செய்யும்?

ஒரு நாள் புதுவையில் பாவேந்தர், வ.வே.சு. ஐயர், புதுவை முத்தியாலுப் பேட்டைக் கிருட்டினசாமி முதலானோர் பாரதியாரின் இல்லத்தில் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அவ்வமயம் வ.வே.சு.ஐயர், கிருட்டினசாமி வைத்திருந்த ஜஸ்டிஸ் பத்திரிகையை வாங்கிப்பார்த்துவிட்டுப் “பொருளாதாரம், உத்தியோகம் முதலிய துறைகளில் பிராமணரல்லாதார் முன்னேறி, பிராமணருடன் சமநிலை அடைதல் வேண்டும் என்பது ஜஸ்டிஸ் பத்திரிகையின் நோக்கம். பிராமணரல்லாதார் சமநிலையடைய முடியாது என்பது என் கருத்து” என்று சிரித்துக்கொண்டே பாரதியாரைப் பார்க்கிறார். பாரதியார் வாய் திறக்கவில்லை.

ஆனால், பாவேந்தரோ வெடுக்கென்று, “பிராமணரல்லாதார் மிகப்பெரும் பாலோர், அடிதடியில் கிளம்பிவிட்டாலோ?” என்று மறுத்துப் பேசிவிட்டார். சிறிது நேரம் அங்கு அமைதி. பின்.வ.வே.சு. சென்றுவிட்டார். அப்பொழுது பாரதியார் பேசுகிறார்: “சுப்புரத்தினம் கேட்டது சரியான கேள்வி, ஆணித்தரமான பேச்சு. அப்படித்தான் பயப்படக் கூடாது. கொடிய கட்டுத்திட்டமும் சட்டங்களும் தூளாகும்படி, அடிதடி சகிதம் உண்டாவதுதான் புரட்சி.” (கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் - பக். 439) இது பாரதி தந்த தீர்ப்பு.

பாரதி போற்றிய அப்புரட்சிக் குயிலின் குரல், சூடு தாராமல் இருக்குமா? ஆனால் அச்சுடு நெருப்பு எவரையும் - எந்தத் தனி மனிதரையும் சுட்டெரிக்கவில்லை. பழங்குச்சிகளை - காய்ந்து போன சருகுகளை - நடப்பவர் கால்களைப் புண்படுத்திய முட்களைத்தான் சாம்பராக்குகிறது. புதிய குமுகாயத்தை உருவாக்கப் பயன்படுகிறது. கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்கவும் புதியதோர் உலகம் ஆக்கவும் பயன்படுகிறது.

பகைப்பாட்டு

குயில் பாட்டுப் பாடிய பாரதியார், அக் காப்பியக் குயிலின் உண்மை நிலையறியாது, அதன் நடத்தையை ஐயுற்று, ‘நீசக் குயில்’ என்று திட்டி விடுகிறார். திட்டினும் பாட்டின் இனிமையில் மயங்கி,