பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

இவரிடமும், ’பலே, பலே’ என்று பாராட்டுப் பெறவா? இல்லை, இல்லை. சிந்தனை வானத்தில் எவ்வளவு எட்டமுடியுமென்று காட்டவா? அல்ல அல்ல.

பின் எதற்கு உரைத்தனர். இப்படி? உணர்ந்ததை உரைப்பது உயர்ந்ததோர் உரிமை; ஏன்? கடமையுங்கூட! அந்தத் தெளிவினால் உரைத்தனர். வழிகாட்டும் பொருட்டு உரைத்தனர்.

யாருக்கு உரைத்தனர்? யாருக்கு வழிகாட்ட நினைத்தனர்? ஊருக்கு வழிகாட்ட உரைத்தனர். நாட்டிற்கு வழிகாட்ட உரைத்தனர். நானிலம் முழுமைக்கும் வழிகாட்டக் கருதினர்.

அன்றைய ஊருக்கு மட்டுமா உரைத்தனர்? இல்லை. இன்றைய ஊர்களுக்குமே உரைத்தனர்; நாளைய ஊர்களுக்கும் சேர்த்தே.

அன்றைய மூவேந்தர் நாடுகளுக்கு மட்டுமா? இல்லை, இல்லை. இன்றைய நாடுகள் அனைத்திற்குமே இவ்வுரை பொருந்தும். நாளைய நாடுகளுக்கும் இதுவே குறிக்கோள்.

அன்றைய, சுருங்கிய நானிலத்திற்கு மட்டுமா? இல்லை. இல்லவே இல்லை. இன்றைய பரந்த நானிலத்திற்கும் இதே. நாளை விரியும் வியனுலகத்திற்கும் இதே.

இது, வாழ்ந்து சிறந்தவர் நல்லுரை;:அறிவுரை: அறவுரை: வாழ்க்கை முறை. இதைக் கேள். இதன் கருத்தை அறி. இதைச் சிந்தி. ஆழ்ந்து சிந்தி. இதைப் பின்பற்று; இப்போது மட்டுமல்ல. எப்போதும் பின்பற்று. காலமெல்லாம் பின்பற்று: மலைபெயர்ந்தாலும் நிலைபெயராது பின்பற்று. அலை அலையாக எதிர்ப்புகள் மோதினும் பின்பற்று.