104
த. கோவேந்தன்
கண்ணன் மழலை வேடம் மாறி மீண்டும் முன்னைய வடிவம் பெற்றான்.
“இன்னும் சிறிதுநேரம் அந்த மழலைக் கோலத்திலேயே இருந்திருக்கலாகாதா!” என்று தேவகி ஏங்கினாள்.
கண்ணன் விசுவகர்மாவை வரவழைத்துத் தன் மழலை வடிவத்தைச் சிலையாக வடித்துத் தரும்படி ஏவினான்.
விசுவகர்மா, மத்தும் கையுமாக இருக்கும் கோலத்தில் சிலை வடித்துத் தந்தான். தேவகி அந்தச் சிலையைக் கண்டு கண்டு களிப்பின் எல்லையைக் கண்டாள்.
இறுதிக் காலத்தில், துவாரகையைக் கடல் கொண்டபோது, அச்சிலையைத் கோபியாகிய திருமண்ணில் மறைத்துக் கடலில் விட்டுவிட்டாள்.
நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு மீனவன் கடலில் படகுப் பயணம் செய்தான். அப்போது புயல் ஒன்று தோன்றிப் படகைக் கவிழ்த்தது. அந்தப் படகு கவிழாமல் மத்வாச்சாரியார் தம் தெய்விக சக்தியால் காப்பாற்றினார்.
அந்த மீனவன் தன்னைக் காத்த மத்வருக்குக் காணிக்கையாக அந்தக் கோபிக்கட்டியைக் கொடுத்தான்.
காணிக்கை பெற்ற மத்வர் அதை உடைத்துப்பார்த்தார். மத்தும் கையுமாயிருந்த கண்ணன் காட்சியளித்தான். அந்தக் கண்ணனை அவர் உடுப்பியில் நிறுவி ஓர் ஆலயம் எழுப்பினார்.
அந்த ஆலயமே உடுப்பியில் இன்று உலகமே வழிபடும் ஆலயமாக விளங்குகின்றது.