பக்கம்:ஏழாவது வாசல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை

பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் தம் அன்பர்களுக்கு வழங்கிய அறிவுரைகளின் இடையிடையே சிறுகதைகளைச் சொல்லியிருக்கிறார். இச் சிறு கதைகளைத் தனியாகத் தொகுத்துப் பல மொழிகளிலே வெளியிட்டிருக்கிறார்கள். இக்கதைகளைப் படிக்கும்போது பகவான் அவர்கள், தம் அன்பர்களுக்கு இறை நெறியை எவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் விளங்க வைத்திருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது.

கடவுள் அருளைப் பெற விரும்புவோர் மூடபக்தி வழியினின்றும் நீங்க வேண்டும் என்பதும், அற்புதங்களை நம்பி அவற்றின் பின்னே ஓடக் கூடாதென்பதும், மதமாற்றங்கள் தேவையற்றவை என்பதும், உறுதியான அன்பும், எளியதொழுகையுமே போதுமென்பதும் பகவானின் கருத்துக்களாக இருப்பதை இக்கதைகளில் காண்கிறோம்.

அருள் நெறியாகவும், அறநெறியாகவும், அறிவுநெறியாகவும் விளங்கும் கருத்து நிறைந்த இக்கதைகளை, எளியநடையில், சின்னஞ்சிறு சொற்றொடர்களில், சுவை கூட்டி எழுதியிருக்கிறார் திரு நாரா நாச்சியப்பன்.

பிஞ்சு உள்ளங்களுக்கேற்ற கொஞ்சு தமிழ் நடையில் இயன்றுள்ள இச் சிறுகதை நூலைத் தம் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதன் மூலம் பெற்றோர்கள் தம்மக்களை அறிவுச் செல்வங்களாக வளர்த்திடலாம்.

அன்னை நாகம்மை பதிப்பகத்தார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/5&oldid=986100" இலிருந்து மீள்விக்கப்பட்டது