பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮

ஒப்பியன் மொழிநூல்

தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிருப்பின், “.....குற்றியலுகரம்... எழுத்தோ ரன்ன” என்று, அதை ஓர் தனியெழுத்தாகக் கூறியிரார்.

குற்றியலுகரமாவது, இடத்தினாலும் சார்பினாலும் குறுகியும் சிறிது வேறுபட்டும் ஒலிக்கும் இயல்பான உகரமே. குற்றியலுகரம் வருமிடத்தில் முற்றுகரமிருக்கமுடியாது. வல்லின மெய்கள், மெல்லின மெய்யும் இடையின மெய்யும் போலன்றிச் சிக்கெனக் காற்றைத் தடுத்தலான் (checks of breath), நீரோட்டம் கல்லில்முட்டி வேகந்தணிகிறதுபோல, ஓசையானது தடைப்பட்டு, ஈற்றிலுள்ள உகரம் குன்றியொலிக்கின்றதெனக் கொள்க.

(3) பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன என்பது.

“ஞ-ண-ந-ம-ன-ய-ர-ல-வ-ழ-ள என்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (45)

என்று, சொல்லீற்று மெய்களைப் பதினொன்றேயென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆதலால், வல்லின மெய் சொல்லீறாமெனக் கொள்ள எள்ளளவும் இடமில்லை.

உரிஞ், பொருந் முதலிய சொற்களும், மண், மீன் முதலிய சொற்களும் உகரம்பெற்று வழங்குவதை, வல்லின மெய்யீறுகள் உகரம்பெற்றுத் தமிழில் வழங்குவதாகத் தாம் கொண்ட கொள்கைக்குச் சான்றாக எடுத்துக்காட்டினார் ரெட்டியார்.

உரிஞு, பொருநு, மண்ணு, மீனு என்று முதலில் உகர வீறாயிருந்த சொற்கள், பிற்காலத்தில் உகரவீறு கெட்டு உரிஞ், பொருந், மண், மீன் என வழங்கினவேயன்றி, முதலில் மெய்யீறாயிருந்த சொற்கள் பிற்காலத்தில் உகரவீறு பெற்று வழங்கினவல்ல.

தமிழர் உலகில் மிகப் பழைமையான மன்பதையராதலின், மொழியொலிமுறையில் குழந்தையர்போல்வர். முதலில், தமிழிலுள்ள எல்லாச் சொற்களும் உயிரீறாகவே ஒலித்தன. பின்பு, புலவராற் பண்படுத்தப்பெற்றபோது, மெல்லின இடையின மெய்களினின்றுமட்டும் உயிரீறு நீக்கப்பட்டது. இவ் வீரின மெய்களும் வல்லின மெய்யிலும் ஒலித்தற் கெளிதாதல் காண்க. இன்றும், சில மெல்லின இடையின