பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றிதழ்[1]

பண்டித ஞா. தேவநேயனார் பி. ஏ. எல். பொதுவாக மொழி நூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி பற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவை யினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய 'சொல்லாராய்ச்சி', பேராசிரியர் மாக்சுமுலர் எழுதிய "மொழியறிவியல்' பேராசிரியர் சாய்சு எழுதிய 'ஒப்பியல் மொழி நூல்' முதலிய ஆங்கில நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு பண்டாரகர் கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு' நூலால் புலப்படலாயிற்று.. எனினும் பண்டாரகர் கால்டுவெல் அறியப் படாத வட்டாரத்தில் செய்ததொரு மூயற்சியாதலால் தமிழ்ச் சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந் துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராயவேண்டுமென்று எம்மைத் தூண்டியது. எனவே "ஞானசாகரம்" (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத்துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப் பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டி ஏற்பட்டமையால் மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத்துறையில் ஆராய் வதற்கு முன் வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பி வைத்தார். அது ஓரளவு எமக்கு மன நிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமுமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம்.

  1. *மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம்.