பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௩௫

திருவாசகம், பெரிய புராணம் முதலியவற்றைப் படிக்கலாமென்றும், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலியவற்றைப் படிக்கக்கூடாதென்றும் கூறியது மதப்பற்றாகும். ஓர் ஆராய்ச்சியாளன் ஒன்றை ஆராயும்போது, தன்னை மதமற்றவன்போலக் கருதினாலொழிய, அதன் உண்மை காணமுடியாதென்பது தேற்றம்.

“காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே — காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்.”

இனி, சிலர் கால்டுவெல் கூறியவாறு, ஒப்பியலறிவின்றி, ஒரு துறையிலேயே அமிழ்ந்து, உள்ளம் பரந்து விரியாமல் குவிந்தொடுங்கப் பெறுகின்றனர். நுண்ணிய மதியும் சிறந்த ஆராய்ச்சியியல்பும் உள்ள, காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர் ஒப்பியலறிவின்மையாற் பல செய்திகளை உண்மைக்கு மாறாகக் கூறிவிட்டனர்.

ஓங்கார வடிவினின்றும் தமிழெழுத்துகள் வந்தனவென்றும்; ஓ என்னும் வடிவம் உம என்னும் மலைமகள் பெயரும் லிங்கக் குறியும் சேர்ந்ததென்றும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தில், வகரம் அருளையும் யகரம் உயிரையும் நகரம் திரோதத்தையும் மகரம் மலத்தையுங் குறிக்குமென்றும், ஆய்தம் மூச்சொலியென்றும், அதன் துணைகொண்டு அரபி, ஹெபிரேயம் போன்ற மொழிகளைத் தமிழில் எழுதலாமென்றும், உடம்படுமெய் என்பது உடம்பு + அடும் + மெய் என்று பிரிந்து, பிறவியைக் கெடுப்பதென்று பொருள்படுமென்றும், ஒகரத்தின் மேல் பண்டைக்காலத்திற் புள்ளியிட்டெழுதினது, சிவ பெருமானின் தக்கண வடிவத்தைக் காட்டுதற்கென்றும், பலவாறு மயங்கிக் கூறினர் பா.வே. மாணிக்கநாயகர்.

இவையெல்லாம் பலவகை மலைவுகளுடையன என்பது ஆராய்ச்சியாளர் எல்லார்க்கும் புலனாகும். ஆயினும், இவற்றுள் ஒன்றைமட்டும், ஏனையோர்க்கும் தெரியும்படி இங்குக் கூறுகின்றேன்.

ய், வ் என்னும் மெய்கள் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் ஈருயிர்களைப் புணர்த்தாலும், இடையில் உடம்படு (உடன்படுத்தும்) மெய்களாய்த் தோன்றத்தான் செய்யும். இது எல்லா மொழிக்கும் பொதுவான ஒலிநூல் விதி.