பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

XV

அவற்றை அறிஞர் எடுத்துக் கூறுவதும், ஆசிரியர் அவற்றைத் திருத்திக்கொள்வதும், அக்கலை வளர்ச்சிக் கின்றியமையாத கடமைகளாகும்; இதனால், சில போலிப் பிழைகள் விளக்கம் பெற்று உண்மை வடிவங்கொள்ளும்; பொறாமை யொன்றே காரணமாகக் கூறும் சிலரின் வெற்றொலிகளும் ஒரு நிலையில் அடங்கிவிடும். என் கட்டுரைகளிற் சில பிழைகளிருந்தன என்பதை இன்று உணர்கின்றேன். ஆயினும், அவை என் பெருமுடிபுகளைத் தாக்காதவாறு மிகமிகச் சிறியனவே உண்மையைப்பற்றிக் கொண்ட ஆராய்ச்சியாளன், ஊக்கமாய் உழைப்பின், முதலிலும் இடையிலும் தவறினாலும் இறுதியில் வெற்றிபெறுவது திண்ணம்.

மொழிநூலானது உலக மொழிகள் எல்லா வற்றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும், ஆரியம் (Aryan), சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர். அவற்றுள், துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திரவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற குடும்பங் களை வகுத்துக் காட்டியுள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந் நூலின் நோக்கம்.அவற்றுக்கொரு தொடர்புண் டென்று, அஃதாவது,அம்மூன்றும் ஒரு மூலத்தி னின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (maxmuller) திட்டமாய்க் கூறிவிட்டார். அம்மூலத்திற்குத் திரவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளனர். இக்கூற்றை என்னா லியன்றவரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன்.

இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆசுத்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது; அவற்றுள், இப்பொத்தகம் முதல் மடல முதற்பாகம், தமிழைப்பற்றிக் கூறுவது. இரண்டாம் பாகம் பிற திராவிட மொழிகளைப்பற்றிக் கூறும். இவை தமிழில் வெளிவந்தபின் ஆங்கிலத்திலும் வெளிவரும்.

தமிழ்நாட்டில், பல நூற்றாண்டுகளாகப் பல தமிழ்ப் பகைவர் பலவாறு தமிழைக் கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால், அவற்றை எடுத்துச் சொல்வது இந்நூன்முடிபுக்கு இன்றியமையாததாயிருக் கின்றது. ஆகையால், அறிஞர்