பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௭௭

திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று கள் ஈறுபெற்ற மக்கள் என்னும் பலர்பாற் பெயரைத் தொல்காப்பியரே வழங்கியிருக்கிறார். இதையறியாத சிலர், தொல்காப்பியர் காலத்தில், கள் ஈறு உயர்திணைப் பன்மைக்கு வழங்கவில்லை என்று கூறுகின்றனர்.

இனி, “பிறப்பியலிலுள்ள சூத்திரங்கட்கும் தைத்திரீய சுக்லயஜு ர் வேதீயப்ராதிசாக்கிய சூத்திரங்களுக்கும் ஒற்றுமை யிருத்தலானும்....ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு வேதங்கள், ப்ராதிசாக்கியங்கள், தர்ம சாத்திரங்கள், யாஸ்க நிருத்தம், நாட்டிய சாத்திரமோ அதன் முன்னூலோ ஆகிய வடமொழி நூல்களிற் பயிற்சியுண்டு என அறியக்கிடக்கின்றது” என்று தம் தொல் காப்பிய எழுத்ததிகார முகவுரையிற் கூறி, கீழே அடிக்குறிப்பில், “அந் நூல்கள் தற்போதுள்ள ஆராய்ச்சியா ளர்களால் கி.பி. 3, 4 நூற்றாண்டுகளுக்கு முன்னருள்ளன எனக் கூறப்படுகின்ற மையான் தொல்காப்பியம் கி.பி. இரண்டாவது நூற்றாண்டதாகும்” என்று சாத்திரியார் கூறியுள்ளது, நெஸ்ப்வீல்டு (J.C. Nesfield) ஆங்கிலத்தில் எழுதிய இலக்கண நூல்களிற் சொல்லப் பட்டவற்றிற்கும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டவற்றிற்கும், சில பொருள்களில் ஒற்றுமையிருப்பதால், நெஸ்ப்வீல்டு இலக்கணத்தைப் படித்துத்தான் தொல்காப்பியர் தம் இலக்கண நூல் இயற்றினார் என்றும், போப் (G.U. Pope) ஆங்கிலத்தில் எழுதிய திருவாசகத்தைத்தான் மாணிக்கவாசகர் தமிழில் மொழி பெயர்த்தாரென்றும் கூறுவது போன்றதேயன்றி வேறன்று.

தொல்காப்பியத்தின் செந்தமிழ் நடையொன்றே, அந் நூலின் தொன்மையைக் காட்டற்குப் போதுமானது. தொல்காப்பியத்திற் பயின்று வரும் 'அலங்கடையே', 'இவணையான' 'சிவணும்' 'ஓரன்ன' முதலிய சொற்றொடர்களும், தொல்காப்பியத்தின் வடசொல்லருகிய தனித்தமிழ்க் கால நிலையை உணர்த்துவனவாகும்.

பல்கலைக்கழக அகராதியின் பதிப்பாளராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியத்தில், பாயிரத்துள் வந்துள்ள 'படிமையோன்' என்னும் சொல்லும், நூலுள், உயிர்களை அறிவுத் தொகைபற்றி ஆறு வகையாகப் பகுத்த பாகுபாடும், சமண மதத்திற்குரியவாதலின், தொல்காப்பியர் சமணரென்று முடிவுசெய்ததுடன், 'படிமை'