பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௭௯

படி, படிமையென்னும் தமிழ்ச்சொற்களையே ப்ரதி, ப்ரதிமா என வழங்குவர் வடநூலார்.இப்போது, மூலச்சொற்களையே படிச்சொற்களாகக் காட்டுவது, எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை எண்ணிக் காண்க. இங்ஙனமே, பல தமிழ் நூல்களும் கலைகளும், வடநூல்களும் கலைகளுமாகக் காட்டப்படுகின்றன வென்க.

தமிழ்ச்சொல்லை வடசொல்லாக மாற்றும்போது, பல முறைகளைக் கையாளுவர் வடநூலார். அவையெல்லாம் இந்நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய் விளக்கப்படும்.

ப்ரதி, ப்ரதிமா என்ற சொற்களில்,கையாளப்பட்ட முறைகள்: (1) முதலெழுத்தை மெய்யாக்கி ரகரஞ்சேர்த்தல், (2) டகரத்தைத் தகரமாக்கல், (3) ஐயீற்றை ஆவீறாக்கல் என்பன.

பவளம், பகுதி முதலிய தமிழ்ச்சொற்களையும், ப்ரவாளம், ப்ரக்ருதி என்று மாற்றுதல் காண்க.

வடமொழியிலும் தென்மொழியிலும் பொதுவாய் வழங்கும் சொற்களை, இன்னமொழிக்குரிய வென்று துணிதற்கு விதிகள் இப் புத்தகத்தின் இறுதியிற் கூறப்படும். அவற்றுள் முக்கியமானது, பகுதிப்பொருள்பற்றியது.ஆரியர் தமிழ்ச்சொற்களை வட நூல்களில் எழுதிவைத்துக்கொண்டு, அவற்றுட் சிலவற்றிற்குப் 'பொருந்தப் புளுகல்' என்னும் முறைபற்றி, ஏதேனும் ஒரு பொருள் கூறுவர்; அது இயலா விடின் இடுகுறியென முத்திரையிட்டு விடுவர். அவ்விடுகுறிச் சொற்கள், தமிழில் பகுதிப்பொருள் தாங்கி வழங்குமாயின் தமிழ்ச் சொற்களேயென்பது ஐயமறத் துணியப்படும்.

ஒரு மூலத்தின் படி (copy), அம்மூலத்தின் அளவாயேயிருத்தலால், அளவு என்னும் பொருளிலும் படி என்னுஞ் சொல் வழங்குவதாகும்.

கா : காற்படி (அரிசி),
பட்டணம்படி -முகத்தலளவு.
படிக்கல் - நிறுத்தலளவு.

படிமுறை, படிக்கட்டு முதலிய தொகைச்சொற்களும் முறையே சிறுசிறு அளவாய் ஏறுதல், பல அளவாய்ச் செல்லுதல் என்னும் கருத்துப் பற்றியனவே. வரும்படி - வரும் பொருளளவு.