பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௮௩

ஒரு மொழியில் இலக்கியம் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும்.

“இலக்கிய மின்றி யிலக்கண மின்றே
எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல
இலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்.”

தொல்காப்பியர் காலத்தில், ஆரியர்க்கு வேதமும் பிராமணமும் ஒருசில மிருதிகளும் இராமாயண பாரத இதிகாசங்களும் தமிழைப் பின்பற்றிய எழுத்து சொல் இலக்கணங்களும் மட்டுமிருந்தன.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”


என்னுங் களவியல் நூற்பாவில், தமிழர் இல்லற வாழ்க்கையின் முற்பகுதியான களவியல் என்னுங் கைகோளை, ஆரிய மணங்கள் எட்டனுள் ஒன்றான கந்தருவத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதாலறியலாகும். இதனால், ஆரிய தமிழ வழக்கங்களை யும் நூல்களையும், ஒப்பிட்டுப் பார்ப்பதில் தொல்காப்பியர் விருப்பமுடையவர் என்பதும் வெளியாகும்.

'புறத்திணையியலில்' வாகைத்திணைபற்றிய நூற்பாவில், 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று கூறியிருப்ப தாலும், தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்க்கு வேதமிருந்தமை யறியப்படும். வேறேயொரு நூலாவது கலையாவது, ஆரியர்க் கிருந்ததாகத் தொல்காப்பியத்தில் எங்கேனும் குறிக்கப்படவேயில்லை.

பிறப்பியலில், “எல்லா எழுத்தும் அந்தணர் மறைத்தே” என்று கூறியது, ஆரிய மறையையன்றென்பது பின்னர் விளக்கப்படும். களவியலுரையில், நச்சினார்க்கினியர்,

“பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப” (13)

என்னும் நூற்பாவிற்கு,

“அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிருபகுதியவாம்” என்றவாறு.