பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

முன்னுரை

வேளாளன் கிரந்தமும் வழவழ” என்னும் பழமொழி எழுந்தது. இதனாலும், பார்ப்பனரும் தமிழரும் வேறானவர் என்பதை யறியலாம்.

“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”

என்று தேவா. (844 : 5) கூறியதும் இக் கருத்துப்பற்றியே.

குலவழக்கு: பார்ப்பனர் இப்போது நன்றாய்த் தமிழறிந்தவராகக் கருதப்படினும், வடமொழிப்பற்றுக் காரணமாக, இயன்றவரை வடசொற்களைக் கலந்து மணிப்பவள நடையிற் பேசுவதே வழக்கம். சாப்பாடு, காரணமாக, அடைமானம், தண்ணீர், திருவிழா, குடியிருப்பு, கலியாணம் முதலிய சொற்களுக்குப் பதிலாக, முறையே போஜனம், வியாஜமாக, போக்கியம், தீர்த்தம், உத்சவம், வாசம், விவாகம் முதலிய சொற்களையே வழங்குவர். இவர்களிடத்தினின்றே தமிழரும் பல வடசொற்களைக் கற்றுத் தம் பேச்சில் வேண்டாது வழங்குகின்றனர். ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுவது உயர்வென்று தவறாய் இப்போது எண்ணப்படுவது போலவே, வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும் முற்காலத்தில் உயர்வாயெண்ணப்பட்டது. இதற்குக் காரணம் பார்ப்பனத் தலைமையே.

அம்மாமி, அம்மாஞ்சி (அம்மான்சேய்), அத்திம்பேர் (அத்தியன்பர்) முதலிய முறைப்பெயர் வடிவங்களும், சாஸனம் (பட்டயம்) தீர்த்தம் முதலிய பொருட்பெயர்களும், அவா போய்ட்டா, நேக்கு, போட்டுண்டு, சொல்றேள் (அவர்கள் போய்விட்டார்கள், எனக்கு, போட்டுக்கொண்டு, சொல்கிறீர்கள்) என்பன போன்ற கொச்சை வழக்கும், ஆடவர் பெண்டிருள் மூத்தாரையும் அடீ என்று விளிப்பதும், பார்ப்பனத் தமிழ்ப் பேச்சிற்கு ஒரு தனித்தன்மை யூட்டுவனவாகும்.

பார்ப்பனர் சில தனிச்சொற்களால் தங்களையும் தங்கள் பொருள்களையும் பிரித்துக்காட்டுவது முண்டு.

உ-ம். மங்கலம், சதுர்வேதி மங்கலம் ஊர்
அக்கிராகாரம் குடியிருப்பு
பிரமஸ்ரீ அடைமொழி
பிரமதாயம் மானியம்
பிரமராயன் அரசப்பட்டம்
குமாரன் மகன்
பட்டவிருத்தி வேதங்கற்ற பிராமணனுக்கு விட்ட இறையிலி நிலம்