பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

92 |  ஒரு கவிஞனின் இதயம்

சென்றாளா என்பதையும் அவர்களின் நலத்தையும் குறிப்பிடுவாய் என்று எதிர்பார்க்கிறேன். என் பேரன் பேத்திகளின் இளங்குதலை மொழிகள் அருகிலிருந்து கேட்டு அனுபவிக்கும் வாய்ப்பு இனி எனக்கு உண்டாகாது.

நான் இனி உதிர்ந்துவிட வேண்டிய பழுப்பிலை. ஆயினும் என்ன? என்னில் கிளைத்த என் மக்கள், என் பேரன் பேத்திகளின் நலன்களில் - மகிழ்ச்சியில் ஒரு விதமான பிடிப்பு இருக்கவே செய்கிறது. “கடந்த ஞானியராயினும் கடப்பரோ மக்கள் மேல் காதல்” என்ற நளவெண்பாவின் கருத்து நிதர்சனமாகிறது.

இறுதியாக நான் உனக்குச் சொல்லுவது இதுதான். குடும்ப கெளரவம் காப்பாற்றப் படவேண்டும். அது போலவே குடும்ப நலனும் மகிழ்ச்சியும் காத்து வளர்க்க வேண்டும்.

அக்காளிடமிருந்தும் மனோகரனிடமிருந்தும் கடிதங்கள் வந்திருந்தன. இந்தக் கடிதங்களே உங்களுடன் என்னைப் பிணைத்து வைக்கின்றன.

மற்றபடி யாவும் நலம்

உன் அப்பா

வெள்ளியங்காட்டான்