பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சந்தனக் கட்டையை விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். குங்குமப் பொட்டு வைக்க வேண்டுமானால் குங்குமம் விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். எங்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் மட்டிலும் சரி வரச் சேர்த்து விட்டால் போதும் என்று உயர்த்திக் கொண்டு ஆதியில் கிறிஸ்து மதத்தை அடுத்து எங்கும் பரவச் செய்த ஏழை மக்களை எதிரிகளிடம் இரக்கமில்லாமல் காட்டிக் கொடுத்து இவர்கள் பழய கிறிஸ்தவர்கள் அல்ல, பறைக் கிறிஸ்துவர்கள் என்றும் தாழ்த்தி மனம் குன்றி நாணம் அடையச் செய்து விட்டீர்கள் (அலாய்சியஸ் I 88-89).

கத்தோலிக்கப் பாதிரியார்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தமது வேண்டுகோளில் தாசர் எடுத்துரைப்பார்.

ஆதலின் பாதர்களென்னும் பெரியோர்களே இவ்வேழைக் கிறிஸ்தவர்களிடம் பணம் சம்பாதிக்கும் எண்ணங்களை ஒர் புறம் அகற்றி நீங்கள் சேர்த்து வைத்துள்ள தொகைகளில் கல்விச் சாலைகளும் கைத்தொழிற்சாலைகளும் ஏற்படுத்தி இவ்வேழை பேதை மக்களுக்கு இலவசமாகக் கற்பித்துக் கல்வியிலும் கைத்தொழிலிலும் முன்னுக்குக் கொண்டு வருவீர்களாயின் நீங்கள் சிறப்படைவதும் அன்றி உங்கள் கத்தோலிக்க மார்க்கமும் சிறப்பைப் பெறும் (அலாய்சியஸ் I 90).

இதே நேர்மை உணர்வோடும் பண்போடும் பிராட்டெஸ்டெண்ட் பாதிரியார்களுக்கும் அவர்கள் செய்து வரும் தொண்டின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுவார் தாசர்.

கத்தோலிக்கு மார்க்கத்தோர்களுக்குப் பின்பு இத் தென்னிந்தியாவில் குடியேறி கிறீஸ்துவின் மார்க்கத்தைப் பரவச் செய்வதற்காய் சகல மக்களுக்கும் உபகாரமாகும் கல்விச் சாலைகளை விருத்தி செய்தீர்கள்! . . .

அவர்களுடைய வஞ்சகக் கூத்துகளை அறியா தாங்களும் பெரிய சாதிகளெல்லாம் கிறிஸ்தவர்களாகி விடுகிறார்கள் என்னும் பெருஞ் சந்தோஷத்தாலும் பெரிய சாதியோரைக் கிறீஸ்தவர்களாக்கி விட்டார்கள் என்னும் பெரும்பேர் கிடைக்கும் என்றெண்ணி நூதனக் கிறீஸ்தவர்களின் மீது அன்பு வைத்து அவர்களுக்கே பாதிரி உத்தியோகங்களையும் உபதேசிகள் உத்தியோகங்களையும் உபாத்திமார் உத்தியோகங்களையும் கொடுத்து விருத்தி செய்து கொண்டு இக்கிறீஸ்து மதத்தைப் பரவச் செய்வதற்காய்க் கல்லடிகளும் சாணத்தினடிகளும் தடிகளினடிகளும் பட்டுப் பரவச் செய்தப் பழயக் கிறிஸ்தவர்களைப் பறைக் கிறிஸ்துவர்கள் என்று சொல்லுவதற்காய்த் தாங்களும் தாழ்ந்த எண்ணத்தை விருத்தி செய்து கொண்டு ஏழைத் தமிழ் கிறிஸ்தவர்களை நடுத்தெருவில் விட்டு தீங்கு செய்ய வைத்தீர்கள் . . .