ஏனோ தெரியவில்லை; கடந்த மூன்று மாத காலமாகக் கணத்துக்குக் கணம், “அவள் என்னவானாள், அவள் என்னவானாள்?” என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்த வண்ணம் இருக்கிறது.
என்ன காரணத்தினாலோ அவளிடம் என் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்ட நான், உண்ணாமல் உண்ணும் போதும், உறங்காமல் உறங்கும் போதும், தொழில் செய்யாமல் செய்யும்போதும் கூட அந்தக் கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்—பதில்தான் இல்லை.
இத்தனைக்கும் அவள் தன் கடைசிக் கடிதத்தில்வெறும் கடிதத்தில் அல்ல; காதல் கடிதத்தில் தான்—அழுத்தந் திருத்தமாக எழுதியிருந்தாள்;
“...நான் கடிதம் எழுதக்கூடிய ஒரு நிலையிலிருந்து, மனமுமிருந்து, சந்தர்ப்பமும் வாய்த்தால் எழுதுவேன். அதுவரை என்னையோ என் கடிதத்தையோ எதிர்பார்த்து நீங்கள் ஏமாற்றமடைய வேண்டாம். நானும் தங்கள் கடிதத்தை எதிர்பார்க்கவில்லை......!”
ஆம், மலரையொத்த மனம் படைத்த ஒரு மாத ரசி, தன் மலர்க் கரத்தால், காதல் நிறைந்த உள்ளத்தில் கருணை சுரக்க அடியேனுக்கு எழுதிய வரிகள்தான் அவை!