பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

49


நெல்லிக்கனியையே இமைபாவாமல் பார்த்தது பார்த்தபடி இருந்தான் அஞ்சி. அவனது தமிழ் மனம் அப்பரிசைக் கொடுப்பதற்குத் தக்க ஜீவனைக் கணித்து விட்டது. அக்கணிப்பின் பலன் நல்ல படியாகவே அமைய வேண்டுமேயென அவன் தமிழ்க் கடவுளைத் தொழுதான்.

பின்னர் தன் சேவகனை அழைத்தான். அதியமான் தன் வேண்டுகோளின்படி தன் அரண்மனை அவைப்புலவராகப் பணி இயற்றி தன் அரசிருக் கையான தகடூரின் பெருமையை எட்டுக் கண் விட்டெரியச் செய்து வந்த தமிழ் மூதாட்டியான ஒளவைப்பிராட்டியைத் தக்க மரியாதைகளுடன் அழைத்து வரச் செய்தான்.

கால் நாழிப் பொழுது கால் எட்டி நடந்தது.

“தமிழ்ப்பாட்டி ஊன்றுகோலும் கையுமாக --தமிழ்மணமும் செவ்வாயுமாக-வந்தாள். தமிழ் வளர்த்த தகைமையாளனாம் அதியமான்நெடுமான் அஞ்சியை வணங்கி வாழ்த்தி இருக்கையில் அமர்ந்தாள்.

தமிழமுதுரட்டும் தாயே! தமிழை வரையாது வழங்கும் வள்ளலான உங்களுக்கு அடியேன் ஒரு பரிசைக் கொடுக்கவே அவ்வளவு அவசரமாகத் தங்களை அழைத்து வரச் செய்தேன்!” என்றான் அரசன்,