பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பூவை எஸ். ஆறுமுகம்

ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ‘குருபூஜை’ஆரம்பமாயிற்று.

இவ்விழாவுக்கு ஊர் நாடுகளில் அவர்களின் வசதிக்கும் இதயத்துக்கும் தக்கபடி, படி, மரக்காலில் அரிசி அளந்து கொடுத்திருந்தார்கள். இது போக, கோயில் சொந்தக்காரர்களான அந்த மூன்று குடும்பங்களும் தலைக்கு ஒரு பொதி அரிசியையும் காய்கறி பருப்பு வகைகளையும் அளித்திருந்தார்கள்.

“ஏழு கோடி மந்திரங்கள் உந்தன் சடாட்சரத்துள் அடக்கம்! முருகா!” என்னும் கோஷங்கள் முழக்கமிட்டன.

மூன்று குடும்பத்தார்களும் விபூதி பிரசாதம் பெற்றனர். அடிமைப் பூசாரிக்கும் பிரசாதம் வழங்கப் பெற்றது.

அன்னதான நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.

ஆண்களும் பெண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் குஞ்சுகளுமாகக் கும்பல் நிரம்பி வழிந்தது.

கோயில் அடிமைக்காரர்களான அந்த மூன்று குடும்பத்தினைச் சேர்ந்த ராமையா, முத்தையா, வீரய்யா ஆகிய மூன்று பிரதிநிதிகளும் அந்த மூன்று பெரும் பந்திகளையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.