இரணியன் ஏன் வந்தான்?
179
ஆசை பற்றிக் கம்பர் இராம காதையை எழுதினார். இராவணனின் கொடுமைகளிலிருந்து உலகை மீட்க இராமன் பிறந்தான். அவன் வரலாற்றை வால்மீகி எழுதினார்; அதைக் கம்பர் தமிழில் ஆக்கித் தந்தார். எனினும் வால்மீகி காட்டாதன சிலவற்றைக் கம்பர் காட்டுகிறார்; தம் தமிழ் நாட்டு மரபுப்படி சில நிகழ்ச்சிகளை மாற்றியும் அமைத்துக் கொண்டார். வால்மீகியோ வீடணனோ வேறு யாரோ நினைத்துப் பார்க்காத அளவிற்கு இந்த இரணியப் படலத்தைக் கம்பர் புதிதாக இராமாயணத்தில் புகுத்தினார்! ஆம்! இது இராம காதை-இராவண காவியம், இதில் இரணியன் ஏன் வந்தான்? கம்பன் இந்த இரணியன் வரலாற்றை-வால்மீகி தொட்டுக்காட்டாத ஒன்றை ஏன் தொட வேண்டும்? அதில்தான் கம்பன் உயர்நலம் காக்கும் தன்மை புலனாகின்றது.
இராவணன் தவறிழைத்தான்; இடித்துரைப்பார் எடுத்துக் காட்டியும் திருந்தவில்லை. முடிவன்றி வேறு முடிவு இல்லை என்ற நிலைக்கு அவன் சென்றுவிட்டான். அங்கேதான் கம்பர் எண்ணிப் பார்க்கிறார். இவன் போலத் தருக்கினால்—தான் என்ற ஆணவத்தால்—தரணி வாழ்வே தனக்கு அடிமை என்ற மமதையால் வாழ்ந்து அதனால் அனைத்தும் இழந்து மறைந்த ஒருவன் அழிவைக் காட்டினால் ஒருவேளை இராவணன் மனம் திருந்தக்கூடும்—ஏன்?—வழிவழியாக உலகம் உள்ளளவும் வருகின்ற ‘இராவணர்’ மனந்திருந்தக் கூடும் என நினைத்தார். நல்ல புலவன் தான் தீட்டும் காவியத்தைக் காலம் கடந்து வாழவைப்பவன்; என்றென்றும் வாழும் சமுதாயத்துக்கு அறம் உணர்த்தி நல்வழி காட்டுபவன்