பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

101


உடீர் உண்ணி கொடீஇர் கொள்ளீர்
ஒவ்வாக் கானத்து உயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே!

முத் தேவர்களின் கோமானான பரம்பொருளையும், இளமைச் செவ்வியுடைய மூவேந்தர்களையும் பாடிய என்னுடைய பாமணக்கும் வாயினால் 'எம்மையும் பாடுக' என்றீர்கள்! நூம்மை யான் எவ்வாறு பாடுவேன்? சினங் கொண்ட போர்க்களிறுகள் வெட்டுப்பட்டு வீழ்தலையுடைய குருதிப் பெருக்காற் சிவந்த போர்க்களத்தினை நீங்கள் கண்ணாற் காணவும் மாட்டீர்கள்; குற்றமற்ற நல்ல யாழினின்றும் எழுகின்ற இசையினை விரும்பிக் கேட்கவும் மாட்டீர்கள்; புலவரின் வாய்ச்சொற்களாக வெளிப்படும் புலம்பலுக்கு இரங்கவும் மாட்டீர்கள்; முருக்கம்பூப் போன்ற இதழ்களையுடைய நும் மனைவியரின் இளைய முலைகளைத் தழுவி இருக்கவும் மாட்டீர்கள்; சமைத்த உணவின் சுவையின்றித் தமிழ்ச்சுவை யாதும் தெளியமாட்டீர்கள், உடுக்கமாட்டீர்கள்; உண்ண மாட்டீர்கள்; கொடுக்கமாட்டீர்கள்; கொள்ளவும் மாட்டீர்கள். தொலையாத காட்டின் நடுவே உயரமான மரத்தில் பழுத்துள்ள உண்ணற்காகாக் கணியென நீங்கள் தோன்றினர்களே!” என்பது பொருள்.

இச் செய்யுள், உலகுக்கு உதவி வாழாதவரைப் புலவர்கள் பாடமாட்டார்கள் என்பதையும் உணர்த்தும்.

74. திருமண விருந்து!

பாண்டியன் தமிழன்பு மிகுந்தவன். தமிழைப் பேணிப்புரந்து வளர்ந்தவன். தமிழ்ப் பாவலர்கட்கு வாரி வழங்கி மகிழ்ந்தவன். இவற்றுடன், அவனே வளமையான தமிழறிந்த புலமையினனாகவும் விளங்கினான்.

ஒரு சமயம், அவனுடைய வீட்டில் ஒரு திருமண வைபவம் நடைபெற்றது. தமிழ்ப்பெரும் புலவரான ஒளவையாரையும் அவன் மிகவும் விரும்பி அழைந்திருந்தான். அவனுடைய அன்பின் மிகுதியை எண்ணிய ஒளவையாரும், அத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.

பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணம் அல்லவா? நாடெங்கும் உள்ள மன்னர்கள் பலரும் தத்தம் பரிவாரப் பெருக்குடன் அங்கே வந்து நிறைந்திருந்தனர். ஒளவையார் அந்தக் கூட்டத்தின் நடுவே பட்ட தொல்லைகள் மிகுதியாக இருந்தன. திருமண விழாவும் ஒருவாறாக முடிந்தது. ஒளவையாரும் பாண்டியன் உவப்புடன் அளித்த பல பரிசில்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.