பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஔவையார் தனிப்பாடல்கள்



அவருடைய கேள்வியிலே, 'மெய்ப்பொருள்' என்றிருந்த சொல்லினைக் கவனியாது. கூத்தர் மேற்கண்டபடி சிற்றின்ப நயத்தோடு செய்யுளைப் பாடிவிட்டார்.

மெய்ப்பொருளாவது பேரின்பப் பொருள். சிவநேயரான கூத்தர் அதனை அறியாதவர் அல்லர். எனினும், செருக்கு எழுகின்றபோது எத்துணை அறிவு நலமும் கெட்டுவிடுகின்ற தன்மைக்கு, அந் நேரத்தில் அவரும் உரியவராயினார்.

'கூத்தரே! தங்கள் செய்யுள் மேற்போக்காகப் பார்ப்பதற்குப் பொருந்துவதுதான். எனினும், யாம் குறித்தவை மெய்ப் பொருள்கள். அதனைத் தாம் அறியாமற் போயினர். அரசியல் சூழலில் இருக்கின்ற நீர், அதன் ஆடம்பரத்தில் மயங்கியிருக்கும் நீர், காதற்பிரிவிலே சிற்றின்பத்தைக் குறிப்பிட்டதாகக் கருதிச் சொல்லிவிட்டீர். 'மெய்ப்பொருள்' என்ற சொல் நுமது கவனத்திற்கு வரவில்லை போலும்?' என்று முழங்கினார் ஒளவையார்.

அவையினர் மீளவும் சிந்தனையில் ஆழ்ந்தனர். பெரும் புலவரான கூத்தரும் தம்முடைய பிழையினை உணர்ந்தவராகத் தலை கவிழ்ந்தார். சோழன் அவருடைய நிலையைக் கண்டு வருந்தினான். அவையின் அமைதியை ஊடறுத்துக் கொண்டு அவனுடைய குரல் எழுந்தது.

'அம்மையே! தாங்களே அக் கருத்துக்களைத் தெளிவுபடுத்துங்கள். எங்கள் ஆர்வம் மிகுதியாகின்றது என்றான் அவன். அப்பொழுது ஒளவையார் சொன்னதாக விளங்கும் செய்யுள் இது.

'ஏற்பார்க்கு இல்லை என்னாது இட்டு உதவுங்கள். வாழ்வில் மறநெறியை ஒழித்து அறநெறிகளையே கைக்கொள்ளுங்கள். உணவுண்ணும் காலத்துச் சிறிதேனும் சோற்றினைப் பிறருக்கு இட்டு, அதன் பிறகே உண்ணுதலைச் செய்யுங்கள்.

இத்துணையும் செய்து வருவதுடன், தெய்வம் ஒருவனே எனவும் உணர்வதற்கு நீங்கள் வல்லமை பெறுதல் வேண்டும். பெற்றீர்களாயின், அறுதற்கரிய வினைகள் ஐந்தும் நும்மிடத்தி னின்றும் அறும் நும் பிறவியும் பயனுடையதாகும்.'

ஒளவையார், இவ்வாறு தாம் கருதியவற்றை மிகவும் அருமையாக எடுத்து விளக்கினார். 'அரிதான உண்மைகள்' என அவையும் அதனை ஏற்று இன்புற்றது.

ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவே னுமனத்தை இட்டுண்மின்-தெய்வம்
ஒருவனே யென்ன உணரவல் லிரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்.