பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒளவையார் தனிப்பாடல்கள்


1. பரமனுக்குப் பாரம்

ருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவர்களின் வரலாறு வியப்பான முறையிலே விளங்க வேண்டும் எனவும் எண்ணினர். இந்த எண்ணம் பற்பல புனைவுகளுக்கு மக்களைத் தூண்டின. ஒவ்வொரு பெரும்புலவரின் பிறப்பைப் பற்றியும் வழங்கி வருகின்ற புனைகதைகளுக்கும் இந்த நம்பிக்கையையே காரணமாகக் கொள்ள வேண்டும். இந்தப் புனைவுகளைக் கழித்தே அவைகளை நாம் உளங்கொள்ள வேண்டும்.

சிறந்த பெரும்புலவர்களாக ஒளவையார்கள் விளங்கினர். சங்ககாலப் பெரும் புலவர்களிடையே ஒருவர் இருந்தார். கம்பர் முதலானவர்களின் காலத்தில் மற்றொருவர் இருந்தார். மற்றும் சிலர் வேறு பல காலங்களில் வாழ்ந்திருந்தனர். 'ஒளவையார்' என்ற பெயரின் பொதுமையினால், அவர்கள் அனைவரும் காலப் போக்கில் ஒருவரேயாகிவிட்ட அதிசயமும் நடந்திருக்கிறது. ஒளவையார் சிரஞ்சீவித்தன்மை பெற்றவர் என்ற விநோதமான நம்பிக்கையும் இதன்பின் நிலைபெறலாயிற்று.

'ஒளவையார்' ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். அந்த அம்மை கலக்கமுற்றனர். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது.

அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள். அதனை அவ்விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர். ஒளவையார் பிறந்த கதை இப்படி வழங்கி வருகிறது. அந்தக் குழந்தை பாடியதாக ஒரு வெண்பாவும் காணப்பெறுகின்றது. அந்த வெண்பா இதுவாகும்,