கடவுள் கைவிட மாட்டார்
29
மெலிந்து களைத்துப் போனதால், காய்ச்சல் அவளையும் கவ்விக் கொண்டது. பார்வதி படுத்த படுக்கையாகி விட்டாள்.
எலும்பும் தோலுமாக ஆகிவிட்டத் தன் மனைவியைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார் நடேசன். தனக்கு ஒரே துணையாகவும், வாழ்க்கை முழுவதும் அன்பு துணைவியுமாக இருக்க வேண்டும் என்று இருந்தவருக்கு பார்வதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உலகத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறிகிளம்பும்.
‘பக்கத்து நகரத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால்தான் பார்வதியின் உடல் தேறும்’ என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நடேசனிடம் புத்திமதி கூறினார்கள். அவ்வாறு மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்றால், குறைந்தது நூறு ரூபாயாவது தேவைப்படும்.
எங்கே போவது? யாரைப் போய் கேட்பது?
எப்பொழுதும் உதவி செய்யும் தருமலிங்கம் இருக்கிறாரே? அவரிடம் போனால்தான் முடியும் என்று முடிவு வந்தார் நடேசன்.
அன்றைக்குப் பார்த்துத்தானா தருமலிங்கம் ஏதோ கவலையில் ஆழ்ந்து இருக்க வேண்டும்?!