பூவை எஸ். ஆறுமுகம்*61
தெரிந்தவர்களும் அவனைத் தெரிந்தவர்களும் சொன்னார்கள். விமரிசனம் நேர்த்தியாக இருக்க வேண்டுமென்றுதான் அவனுக்குச் சம்மானமாக மாதத்திற்கு நூறு ரூபாய் தரப்படுகிறது என்கிற விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ, என்னவோ? யார் கண்டார்கள்?
தன் நாடக விமரிசனத்தை ஒரு முறை மேலோட்டமாகப் பார்த்தான் அம்பலத்தரசன்.
"...நாடகத்திற்கு நாயகியாக அமைந்திட்ட குமாரி ஊர்வசி மிகவும் இயல்பாகத் தோன்றினார். பண்பட்ட நடிப்புத்திறம் அவரிடம் சுடர்விட்டது. நயவஞ்சகன் ஒருவனால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்படவிருந்த கட்டத்தில், அவள் நடத்தும் போராட்டமும் அத்துன்பத்திலிருந்து விடுபடச் செய்யும் முயற்சியும் வெகு தத்ரூபம். அபலை ஒருத்தி இப்படிப்பட்ட அநியாயத்திற்கு இலக்காகும் நிலையைக் காணும்போது, மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. தன் எத்தனம் பலன் காட்டாத நிலையில், அவள் கற்பு பறிபோகிறது. உடனே தனக்கு விதித்த துர்ப்பாக்கியத்தை நினைத்து நினைத்து மெளனமாக அவலக் கண்ணீர் வடிக்கும் கட்டமும் அம்பிகையின் முன்னே விழுந்து, "பெண்ணாகப் பிறந்திட்ட நீ ஒரு பெண்ணின் கற்பைக் காத்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாதா, தாயே!. நானோ அபலை! நீயே சர்வல்லமைக்காரியாயிற்றே! உன் திரிசூலம் எங்கே? உன் வெஞ்சினம் எங்கே? நீயும் அந்த நயவஞ்சக மிருகத்துக்குப் பயந்தொடுங்கிப் போய்விட்டோயோ? நீ வெறும் கல்தான் என்று அந்தப்பாவி நினைத்துத்தான் என்னைப் பழிகாரியாக்கிவிட்டான்! ஆமாம், எனக்கு நீ இனி காப்புத் தரவேண்டாம். அந்தக் காப்பும் இனி எனக்குத் துச்சம்! என்னைக் காக்க கடல் இருக்கிறது..." என்று வசனம் பேசி, கடலை நாடி ஓடும் கட்டமும் ஊர்வசிக்குச் சிறப்பை நல்கும்.