பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“நீங்கள் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டீர்கள்?
எந்த உணர்ச்சியும் எல்லை மீறும்போது
உங்களால் தாங்க முடியாதே

ஒரு நாள்
என்னை மறந்து விடுங்கள்,
நான் வேறு ஒருவரை..
என்று என் நாவினால் சொல்கிறேன்
என்று வைத்துக்கொள்ளுங்கள்..
அப்போது உங்கள் இதயம்
துன்பக் கத்திரியால் வெட்டுப்பட்டுத்
துடிதுடிக்காதா?

அல்லது
நீங்கள் எதிர்பார்க்காதவாறு,
நாளையே எனக்கு மாலை சூட்டலாம்
என்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்..
அப்போது உங்கள் இதயம்
ஆனந்த மின்னலின் அதிர்ச்சியால்
படபடக்காதா?

எப்படியும்
உங்கள் உயிருக்கு உறுதி இல்லையே!
நீங்கள் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டீர்கள்?”

நீ கேள்வியை எழுப்பிவிட்டுப் போகிறாய்.
நான் தனிமையில் புலம்புகிறேன்;

“நான் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டேன்.”

 


68

99