பக்கம்:கனிச்சாறு 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  239


164

தமிழினம் விழித்தெழுமே!


பிடிக்கட்டும் பிடிக்கட்டும் என்றிருந்தார் - அட
பிடித்தெமை உள்ளேயும் வைத்துவிட்டார்
அடிக்கட்டும் அடிக்கட்டும் என்றிருப்பார் - எமை
அடிக்கவும் செய்குவார் உயிர்சிதைப்பார்!

எம்மினத் தமிழரின் பதைபதைப்போ - என்றும்
இந்நிலை மாறாது! புதுவியப்போ?
அம்மி நகர்ந்தாலும் நகர்ந்துவிடும் - இன
அடிமைகள் என்றென்றும் அசைவதில்லை!

தன்மானம் கெட்டனர்; மதிகெட்டனர் - தம்மின்
தசையாடும் என்பார்கள்! தரங் கெட்டனர்!
என்னானும் ஆகட்டும்! இழப்பாகட்டும் - எமக்கு
என்னதனால் வந்ததென் றுடல்வளர்ப்பார்!

தமிழினம் தனித்தனி இடமானது - ஆனால்
தமிழுணர் வென்றுமே வளமானது!
அமிழாது தமிழுணர்வு என்றாகிலும் - முளை
அரும்பாதோ? இனமானம் வளர்ந்திடாதோ?

இருக்கின்ற அத்தனை உருவங்களும் - தமிழ்
இனமில்லை என்றாலும் இருக்கின்றேன் நான்!
உருக்கின்ற உலையினில் என்னையிட்டாலும் - நான்!
உருக்குலைந் திடல்என்றும் நேர்வதில்லை!

என்போலும் கோடியர் இலையென்றாலும் - மற்றிங்
கிருப்பவர் ஆயிரம் பேரென்றாலும்,
துன்பேதும் மொழி, இனம் பெறுமென்னிலோ - உள்ளம்
துடிதுடித் தெழுந்திடல் உறுதியன்றோ?

ஆயிரம் இலக்கமும் கோடியாகும் நூறு
ஆண்டுகள் ஆயினும் சளைத்தலில்லை!
வாயுரம் அன்றிது வரலாறன்றோ? எம்
வழிவழித் தமிழினம் விழித்தெழுமே!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/275&oldid=1437486" இலிருந்து மீள்விக்கப்பட்டது