பக்கம்:கனிச்சாறு 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  39


பார்க்கு மிடந்தொறும் நெல்முதிர் பைம்பயிர்
சூழ்வயல்கள்
ஆர்க்குஞ் செழுங்கடல் முப்புறம்! வானில்
அகன்மலைகள்!
ஈர்க்கும் பிறன்பொருள் வேண்டுவ தில்லை;யிங்(கு)
ஈநுழைமோ?
ஆர்க்குமிங் கஞ்சுதல் இல்லையென் பீரந்த
ஆளுநர்க்கே! 5

வல்லன் அமெரிக்க னோபிற னோவரும்
வாய்ப்பிருப்பின்
வெல்லரி தென்றே விளம்புவர் கோழையர்;
வீழ்ச்சியெனின்
சொல்லலும் வேண்டுமோ? நீணிலம் முற்றுமே
சேர்ந்தொழிமே!
அல்லல் விளைப்பவன் தானும் அழிமென்
றவர்க்குரைமே! 6

ஊரை வளைத்தே உணர்வழித் தான்றோர்
உயர்வழித்துச்
சீரை யழித்து மொழியை யழித்துச்
சிறப்பழித்துப்
பேரை யழித்துப் பிழைப்பழித் தேயினம்
பின்னழிக்க
ஆரை நினைத்திவண் அண்டினர் என்றே
அறைகுவிரே! 7

இணங்கார் எனின் தமிழ்க் காளையர் தோள்கள்
எழுந்தெதிர்க்கும்;
வணங்கார் எனின் தமிழ்ப் பெண்டிர் மலர்க்கைகள்
வாளெடுக்கும்!
நிணங்காண்! தசைகாண்! குருதியின் செந்நிறங்
காண் எதிர்த்தார்!
பிணங்காண்! எரிகாண்! பொடிகாண்! பின்னெழும்
பைந்தமிழே! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/75&oldid=1424728" இலிருந்து மீள்விக்கப்பட்டது