பக்கம்:கனிச்சாறு 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  223


அரசியல் பூசல் இழிவுக ளெல்லாம்
அறவே தவிர்க்க முயல்வது உண்மை
அறத்தை என்றும் பயில்வது! - உயர்
ஆளுமை நெறியோ டியல்வது! - முறை
யற்றவர் சீய்க்கும் புயல்அது!
புயல்அது! புயல்அது!

கரவாய்க் களவாய் ஏழையைச் சுரண்டும்
கயவரை அழிக்கும் வாளாகும்! - அவர்
கயமைகள் இதன்முன் தூளாகும்! - ஏழைக்
கனவுகட் குரிமைத் தாளாகும்! - அவர்
கடமைகட் குழைக்கும் ஆளாகும்!
ஆளாகும்! ஆளாகும்!

இயற்கை வளங்கள் விளைவுகள் எல்லாம்
எவர்க்கும் பொதுமை எனக்கூறும்! - இதற்
கெழுதுக சட்டம் எனக்கோரும்! - மக்கட்
கெல்லா நலன்களும் மிகச்சேரும்! - எனவே
இணைத்துக் கொள்வீர் உடன்வாரும்!
உடன்வாரும்! உடன்வாரும்!

மயற்கை செய்யும் கழிசடை, காம
மலிவுக் கலைகளைக் கட்டழிக்கும்! - அவை
மனங்கொள் வாரைச் சுட்டெரிக்கும்! - தமிழ்
மானமி லாரை விட்டொழிக்கும்! - இன
மலர்ச்சிக் கென்றே நெட்டுயிர்க்கும்.
நெட்டுயிர்க்கும்! நெட்டுயிர்க்கும்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/258&oldid=1444647" இலிருந்து மீள்விக்கப்பட்டது