பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கபோதிபுரக்


வேண்டும். கொடுத்தால் நாங்கள் போய் விடுகிறோம். இல்லையேல் நீயும் ராதாவும் போகவேண்டிய இடத்துக்குப் போகத்தான் வேண்டும் என்றான் வேலன்.

“ஆயிரம் ரூபாயா... என்னிடம் இருப்பதே கொஞ்சந்தானே” என்றான் கருப்பையா.

“கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா ஓர் ஆயிரம் ரூபாய்க்கு அஞ்சுவது?” என்றான் வேலன்.

சரி என ஒப்புக்கொண்டான் கருப்பையா. ஆனால் ஆயிரம் ரூபாய் தந்ததும் போட்டோவை (நெகட்டிவுடன்) தன்னிடம் தந்துவிட வேண்டுமெனப் பேரம் பேசினான்.

“அது முடியாது ஆயிரம் ரூபாய் நான் வெளியே போவதற்கு, படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக்கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒரு முறை பணம் வருவது தவறினாலும் படம் வெளியாகும். படம் வெளிவந்தால் என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். சாரதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்” என்று வேலன் “கண்டிஷன்கள்” போட்டான்.

“ஐயா உனக்குக் கருணை இல்லையா?” என்று கெஞ்சினான் கருப்பையா.

“கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப்போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது” என்றான் அந்த உல்லாசக் கள்ளன்.

வேறு வழியின்றிக் கருப்பையா ஒப்புக்கொண்டான்.

மறுதினம் ஆயிரம் ரூபாய், (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான்.

உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஊருக்குப் பிரயாணமாயினர்.