பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. வந்தால் கப்பலுடன் வருவேன்
இல்லையானால் கடலிலே சாவேன்!

கப்பலோட்டிய ஒரு தனிமனிதனைப் பார்க்கிறோம், வரலாற்றிலே படிக்கின்றோம்! இந்தத் தமிழன் ஏன் கப்பலோட்டினார்? எதற்காகக் கப்பலோட்டினார்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, கப்பலோட்டும் கலை தமிழர்களுக்கே உரிய ஒர் பாரம்பரியம் மிக்கது என்பதற்குச் சான்றாக, மூவேந்தர்களில் ஒரு பிரிவினரான சோழ சாம்ராச்சிய மன்னர்கள் பலம் வாய்ந்த தங்களது கப்பற்படைகளால், கடாரம், சாவகம், இலட்சத் தீவுகள், சிங்களம் போன்ற நாடுகளை வென்றார்கள் என்ற வரலாறுகளுக்கும் சான்றாக, தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்திலே பிறந்த சிதம்பரம் பிள்ளை தன்னந்தனி மனிதனாக நின்று கப்பலோட்டினார்.

வெள்ளைக்காரன் தமிழர்களுடைய செல்வத்தைச் சுரண்டுவது கண்டு நெஞ்சு பொறுக்காத சிதம்பரம் பிள்ளை வெள்ளைக் கொள்ளையனை எதிர்த்துக் கப்பலோட்டினார்!