அ. ச. ஞானசம்பந்தன் 35 வள்ளன்மை - போர் வீரம் அடுத்து அவர்களின் புறப்பாடல்களை ஆய்ந்த அவன், அதன் நிறைவு குறைவுகளையும் காண முடிந்தது. புறப்பாடல்களில் அதிகமாக இடம்பெற்றிருந்த பகுதி அவன் மனத்தில் துணுக்கத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு பாடலும் இரவலர்க்கு அரசர்கள் வழங்கும் வள்ளன் மையைப் போற்றுவதாக அமைந்திருத்தலைக் கண்டான். புற வாழ்க்கைக்கு இலக்கணம் வடித்த தொல்காப்பியப் புறத்திணை இயலும் இந்த வள்ளன்மையைப் பாராட்டிப் பேசிற்று. கொடுத்தல் எய்திய கொடைமை யானும் (புறத்திணை-7) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் (புறத்திணை-29) என்று இலக்கணம் பேசிய காரணத்தால், உடையார் இல்லாதவர் என்ற பாகுபாட்டை அந்தச் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருந்தது என்பதையும், அவன் அறிய நேர்ந்தது. அடுத்துப் புறத்தில் மிகுதியாகக் காணப்பெறும் பாடல்கள் போர்க்களத்தில் காட்டும் வீரம் பற்றியன வாகும். இந்த வீரத்தைப் புகழும் அதே நேரத்தில், போரால் விளையும் அவலநிலை பற்றியும் பாடல்கள் இருந்தன. தொல்காப்பியக் காஞ்சித்திணைச் சூத்திரம் போர்க் களத்தில் கணவனை இழந்த மனைவியரின் அவல நிலையை எடுத்துப் பேசிற்று. மகனை இழந்த தாயர், சுற்றத்தார் படுந்துயரம் பற்றியும் பேசிற்று என்றாலும், போர்க்களத்தில் வீரம் காட்டுதலைப் பெரிதும் விரும்பிப் போற்றின. பரத்தைமை ஒழுக்கம், கள்ளுண்டு மகிழ்தல் என்பவற்றையும் முனைந்து சாடின. குறள் கூட இப்போர்க்கள வீரத்தைப் பெரிதுபடுத்திப் புகழ்ந்து கூறிற்று.