பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


அண்டர் நாயகன் அருள் தூதன்
        யான் எனாத்
தொண்டை வாய் மயிலினைத்
        தொழுது தோன்றினான்.

அநுமன் கண்டு விட்டான். சீதை கொண்ட கருத்தையும் உணர்ந்து விட்டான். நடுக்கம் கொண்டான். ‘இராமன் அனுப்பிய தூதன் நான்’ என்று கூறிய வண்ணம் கை கூப்பிச் சீதை எதிரில் தோன்றினான்.

***

அநுமனும் கண்டனன் - சீதையின் செயலைக் கண்டான்; கருத்தும் எண்ணினான் - அவள் கொண்ட் கருத்தையும் அறிந்தான்; துணுக்கம் கொண்டனன் - அச்சம் கொண்டனன்; மெய் தீண்டக் கூசுவான் - உடலைத் தொட்டு அச் செயலினின்றும் தடுக்கக் கூசினவனாய்; அண்டர் நாயகன் அருள் தூதன் யான் எனாத் - தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இராமன் அனுப்பிய தூதன் நான் என்று கூறி; தொண்டை வாய் மயிலைத் தொழுது - கோவைப்பழம் போலும் வாய் கொண்ட மயில் போலும் சாயல் உடைய சீதையைத் தொழுது கொண்டே; தோன்றினான்.

***

“இராமன் கட்டளைப்படி அடியேன்! இங்கு வந்துளேன்; உன்னைத் தேடிக் காண்பதன் பொருட்டு உலகெங்கும் சென்றவர் கணக்கற்றோர். நான் முன் செய்த தவப்பயனால் நின் சேவடி நோக்கினேன். உன் பிரிவால் வாடும் இராமன் நீ இங்கிருப்பது அறிந்திலன் என்னைப் பற்றிய ஐயம் உனக்கு எள்ளளவும் வேண்டாம். இராமபிரான் கொடுத்தனுப்பிய அடையாளப் பொருளும், கூறிய அடையாளச் சொற்களும் என்னிடம் உள, அவற்றை நேரில் காண்பாய்.” என்று கூறினான் அநுமன்.