பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193



தம் முனைக் கொல்வித்து அன்னான்
        கொன்றவர்க்கு அன்பு சான்ற
உம்மினத் தலைவன் ஏவ
        யாது எமக்கு உரைக்கலுற்றது.
எம்முனைத் தூது வந்தாய்?
        இகல்புரி தன்மை என்னை?
நொம் மெனக் கொல்லாம்
        நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான்.

“இன்னொருவனை அழைத்து வந்து தனக்கு மூத்தவனைக் கொல்லச் செய்து, அப்படிக் கொன்றவனுடன் நட்புக் கொண்டுள்ள உங்கள் குலத் தலைவன் எமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டது யாது? அஞ்சாமல் சொல். அவசரப்பட்டு உன்னைக் கொல்லமாட்டோம்” என்றான் அரக்கர் கோன்.

***

தம் முனைக் கொல்வித்து – தன்னுடைய முன்னவனை (பிறன் ஒருவனைக் கொண்டு) கொல்லச் செய்து; அன்னான் கொன்றவற்கு – அப்படிக் கொன்றவனுக்கு; அன்பு சான்ற – அன்பு கொண்ட; உம்மினத் தலைவன் ஏவ – உங்கள் இனத்தலைவனாகிய சுக்ரீவன் கட்டளையிட; எமக்கு உரைக்கல் உற்றது யாது? – நீ எனக்குச் சொல்ல வந்தது யாது? எம்முனைத் தூது வந்தாய் – எம் முன் ஒரு தூதனாக வந்த நீ; இகல் புரி தன்மை என்னை? – போர் கோலம் பூண்ட கருத்து யாது? நொம் எனக் கொல்லாம் – எல்லாவற்றையும் கேட்டுத் தெளியாமல் திடீரென்று உன்னைக் கொல்லமாட்டோம். நெஞ்சம் அஞ்சலை – பயப்படாதே; நுவல்தி – சொல்வாய்; என்றான்–என்று கூறினான் இலங்கை வேந்தன்.

***

கி.—13