பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259



அடுத்தபடி என்ன? "தூதுவன் ஒருவன் தன்னை விரைவில் தூண்டி மாதினை விடுதியோ என்று கேட்போம். மறுக்குமாகில் போர் தொடுப்போம்" என்று கூறினான் இராமன். அவ்வாறே அங்கதன் தூது சென்றனன். ஊழித்தீயும், ஆலகால விஷமும், இயமனும் ஒருங்குசேர்ந்து கால்களாகவும் கைகளாகவும் உருப்பெற்று, பெருங்கடல்போல் வீற்றிருந்த இராவணன் முன் சென்று நின்றான்.

***

நெடுந்தகை - உயர்குணத் தோன்றலாகிய இராமன்; விடுத்த - அனுப்பிய, தூதன் - தூதனாகிய அங்கதன்; இணையன - இவ்வாறு; நிரம்ப எண்ணி - (இராவணனைப் பற்றி)ப் பலவாறு நினைத்துக்கொண்டு; கடும் கனல் - ஊழித் தீயும்;விடமும் -நஞ்சும்;கூற்றும்-இயமனும்; கலந்து - ஆகிய யாவும் ஒன்றாகி; கால் - கால்களாகவும்; கரமும் - கைகளாகவும்; காட்டி-தோன்றப்பெற்று; விரிகடல் இருந்தது என்ன - பரந்த கடல் இருந்ததுபோல; சுடர்விடு மகுடம் மின்ன - ஒளிவீசும் மகுடமானது தன் முடிமீது விளங்க; கொடுந் தொழில் மடங்கல் அன்னான் - பாய்ந்து கொல்லும் கொடிய தொழில் உடைய ஆண் சிங்கம் போன்ற இராவணன்; எதிர் சென்று - எதிரே போய்;குறுகி -நெருங்கி;நின்றான்.

***

நின்றவன் தன்னை, அன்னான்
        நெருப்பு எழ நிமிரப் பார்த்து, ‘இங்கு
இன்று, இவண் வந்து எய்திய நீ யார்?
        எய்திய கருமம் என்னை?
கொன்று இவர் தின்னா முன்னம்
        கூறுதி, தெரிய’ என்றான்
வன்திறல் வாலி சேயும்,
        வாள் எயிறு இலங்க நக்கான்,