73
காப்புச் செய்யுள்
அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்,
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்.
தொடக்கத்திலே ஆஞ்சநேயருக்கு வணக்கம் செலுத்துகிறார் கவி. அஞ்சிலே ஒன்று பெற்றவர் ஆஞ்சநேயர். ஐந்து என்பது அஞ்சு என்று மருவி வழங்கப்பட்டது.
ஐந்து எவை?
பஞ்ச பூதங்கள். பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் என்பன பஞ்ச பூதங்கள் எனப்படும். இவை முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்றும் பெயர் பெறும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய வாயுவின் புத்திரன் என்று பொருள். காற்றின் மைந்தன் என்றும் இவரை அழைப்பதுண்டு.
எனவே அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் காற்றின் மைந்தனாகிய ஆஞ்சநேயன் என்று பொருள்.
ஆஞ்சநேயர் என்ன செய்தார்? அஞ்சிலே ஒன்றை தாவினார். அஞ்சிலே ஒன்று எது? ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய நீரைத் தாவினார். அதாவது கடலைத் தாவினார். எப்படித் தாவினார்? அஞ்சிலே ஒன்று வழியாகத் தாவினார். அதாவது ஆகாய வழியாகத் தாவினார். தாவி எங்கே சென்றார்? அயலார் ஊருக்குச் சென்றார். அயலார் ஊர் எது? இலங்கை. இலங்கைக்குச் சென்றார்.