தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
13
நான் இதை ஒத்துக்கொள்ளமாட்டேன். அது எல்லாம் வேறு ஆட்கள் பாடினது. தாங்களே சொல்லியிருக்கிறீர்களா தங்கள் சுயசரிதத்தில்?
கம்பன் – நான் என்ன இந்த திருநெல்வேலிக்காரர்களைப் போன்றவனா? சும்மா தன் ஊர்ப் பெருமையே பேச, ஒரே ஒரு இடத்தில்
- அழிந்ததேர் அழுந்தா முன்னம்
- அம்பொடு கிடந்து வெம்பி'
என்று மட்டும் குறித்திருக்கிறேன். அந்த ஊர் தான் தம்பி திருஅழுந்துர், ஆம், நான் அங்கு பிறப்பதற்கு முன்னமேயே, திருஅழுந்தியிருந்த ஊர் அது. திருஅழுந்திய ஊரில் தேரும் அழுந்திற்று அதைக் குறித்திருக்கிறேன்.
நான் – நல்ல ஆளையா தாங்கள் ஏதோ யுத்த களத்தில் தேர் அழுந்தியதைக் குறித்துவிட்டு, அடே! இதுதான் என் ஊரைப் பற்றிய குறிப்பு என்று கயிறு விடுகிறீர்களே!
கம்பன் – பின்னே என்ன!. இப்படிக் கேள்வி கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வேன். இன்றைய ஆராய்ச்சியாளர்களாகிய நீங்கள் எல்லாம் இப்படித்தானே ஆராய்கின்றீர்கள். ஆராய்ந்து முடிவு கட்டுகிறீர்கள்.
நான் – அப்போது என்ன கேள்விகள் எப்படித்தான் கேட்க வேண்டும் என்கிறீர்கள்?
கம்பன் – நான் பிறந்த நாடு, நான் வளர்ந்த காலம், நான் பாடிய காவியம், நான் வணங்கிய தெய்வம், நான் விரும்பிய பாத்திரம், நான் போற்றிய புலவன், நான் கண்ட கனவுகள் என்பதைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டால் தக்க பதில் சொல்வேன்.