பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

69



“பகையற்ற உன்மீது மிகை அற்ற நான், அம்பு ஏவமாட்டேன்” என்றான் இராமன்.

“வம்புக்கு இழுத்தேன்; அதற்குரிய விலை தந்துதான் ஆகவேண்டும்” என்றான் பரசுராமன்.

அவன் விட்ட அம்பு அவன் ஈட்டிய தவத்தை வாரிக் கொண்டு இராமனிடம் சேர்ந்தது. முனிவன் தன் தவமும் வல்லமையும் இழந்து, அடங்கிச் சினமும் ஆணவமும் நீங்கித் திருந்தி அமைந்தான்.

பரசுராமன் அரசுராமனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கால் சென்றவழித் தவம் செய்ய இமயமலைச் சாரலை நோக்கிச் சென்றான். இராமன் எனறால் கோதண்டராமன்தான் எனறு உலகம் பேசும்படி அவன் புகழ் பன்மடங்காகியது.

தவமுனரிவனிடம் வென்று பெற்ற வில் அப்பொழுது தேவைப்படவில்லை; அதனை வருணனி டம் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி இராமன் ஆணையிட்டான் அது பிற்காலத்தில் கரனோடு போர் செய்யும்போது பயன்பட்டது; அவன் சிரம் நீக்க இந்த வில்லைக் கேட்டுப் பெற்றான்; தக்க சமயத்தில் உதவியது; பரசுராமனிடம் பெற்ற பரிசு இந்த வகையில் அவனுக்குப் பயன்பட்டது. பரசுராமன் வடக்கு நோக்கி விடை பெற்றதும் அடக்கமாகத் தந்தையை அணுகித் தன் வெற்றியை விளம்பினான் இராமன். அச்சம் நீங்கித் தசரதன், நல்லுணர்வு பெற்றுக் களிப்பு என்னும் கடலுள் ஆழ்ந்தான். தீமை விலகிற்று என்பது ஒன்று; இராமன் வெற்றி பெற்றான் என்ற சிறப்பு மற்றொன்று.