பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பரம்பரைகள்

33



செய்யும். "ஜார்ஜை"யும் மறந்து, சிங்காரம், அந்தக் கும்பலைக் கவனிக்கத் தொடங்கினான். தேவாவின் கண்கள் சிங்காரத்தின்மீது கோபத்தைக் கக்கிற்று. "இதுதானா நீ நாய் வளர்க்கும் இலட்சணம்" என்று கேட்டாள். அருமைநாதன் விஷய விளக்கம் கேட்டான். கோபத்தோடு பதிலளித்தாள், தேவா. "அப்பா" கொடுக்க இஷ்டப்படவே இல்லை. அம்மாவும், இந்த அன்னாடிகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். நான்தான், பிடிவாதமாகப் பேசி, நாய்க்குட்டியை வாங்கிக்கொடுத்தேன். அதை இந்த இலட்சணமாக்கி விட்டார்கள்" என்றாள். தேவா கோபத்தைக் கக்கிக்கொண்டிருந்தபோது, சிங்காரம் பயத்தோடு, நாய்க்குட்டியைத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். "அன்னாடிகள் " என்ற சொல், சிங்காரத்தின் இருதயத்திலே வேல் பாய்வதுபோல் பாய்ந்தது. இருதயத்திலே ஆயிரம் வேல்பாய்வது போலாகிவிட்டது. அருமைநாதனின் பேச்சு! அவன் சொன்னான், 'என்ன தேவா! இந்த ஏழைகளிடம் தரலாமா. இந்த அருமையான நாய்க் குட்டியை, இதுகளுக்கே, சுத்தமாக வாழத்தெரியாமல், குப்பையில் புரண்டுகொண்டிருக்கின்றன. இதுகளைச் சீர் திருத்திக் கழுவிக் குளிப்பாட்டும் வேலையிலே நாம் ஈடுபட்டிருக்கிறோம் நீ, இவன் நாய்க்குட்டியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்று குறைப்படுவது தவறு. "ஜார்ஜ்"ஜின் உடல் அழுக்குக் கிடக்கட்டும், இவன் தலையைப்பார் வறண்டுகிடக்கிறது. சட்டையிலே பார் எவ்வளவு அழுக்கு, காலிலேபார் சேறு, கண்ணிலேபார் மசி, இவன் இருக்கும் இலட்சணத்தைக் கவனிக்காமல் நாய்க்குட்டியைக் கவனிக்கிறாயே, நீ ஒரு "பைத்யம்" என்றான். 'ஆமாம்' என்றாள் தேவா; ஆனால் அருமைநாதன் கூறியதை எண்ணியல்ல. இப்படிப்பட்டவனைக் கலியாணம் செய்து கொள்ளவேண்டுமென்றுகூட ஒரு சமயத்திலே நினைத்தோமே என்ற எண்ணத்தாலேதான். சிங்காரத்தால் அழத்தான் முடிந்தது, அன்னம் முணு முணுத்தாள், கையை நொடித்தாள், வேறு என்ன செய்வாள்? சேவா