பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகப் பற்று

82

அதிகாரப் பிரிவினை

னுக்காவது அல்லது அமெரிக்காவிற்காவது அல்லது இந்தியாவிடம் மிக அதிகச் சலுகையைப் பெறும் வேறு எந்த நாட்டிற்காவது எவ்வளவு சலுகை காட்டப்படுமோ, அவ்வளவையும் ஜப்பானுக்கும் காட்டுவதாக ஒரு ஷரத்து எழுதிச் சேர்த்தால், அது அதிகச் சலுகை பெறும் நாட்டு ஷரத்தாகும். கொடுக்கல் வாங்கல் நிலையில் பேரம் பேசி, ஒரு நாடு பெறும் சலுகைகளையெல்லாம் இந்த ஷரத்தால் பலனடைந்த நாடு சும்மாவே பெறும். இந்நிலையைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில் நாடுகளுக்குள் ஓர் ஏற்பாடு இருக்கிறது. அதாவது அதிகச் சலுகை பெறும் ஒரு நாட்டின் தகுதியை, இந்த ஷரத்து மூலம் பலனடையும் நாடும் பெறவேண்டுமாயின், அந்த நாடும் அதிகச் சலுகை பெறும் நாட்டைப்போலப் பேரம் செய்து, இரு சாரார்க்கும் வியாபார நிலையில் பலனளிக்கும் முறையில் நடந்து கொண்டால் தான் அந்த ஷரத்தின் பலனை யடையலாம் என்பது. இது ஒரு சர்வதேசச் சட்டமில்லையாயினும், நாடுகளிலும் ஒப்பிக் கடைப்பிடிக்கப்படும் ஒழுகலாறு.

அதிகப் பற்று (Overdraft) : பொதுவாக ஒரு பாங்கின் வாடிக்கைக்காரர்கள் அவர்களது நடப்புக் கணக்கிலுள்ள பணத்தைச் செக்குகள் மூலமாக வாங்குவது வழக்கம். ஒரு செக்கைக் கண்ணியப்படுத்துவது என்பது, ஒருவர் முன்னதாகவே தமது நடப்புக் கணக்கின் வரவிற்குச் செலுத்திய தொகையை அவர் எழுதிக் கொடுக்கும் செக்கிற்கு யாதொரு தடையுமின்றி உடனே கொடுப்பதாகும். ஆனால் சில சமயங்களில் ஒருவரது நடப்புக் கணக்கிலுள்ள தொகை, அவர் தயாரித்த செக்கில் குறிக்கப்பட்டுள்ள தொகையைவிடக் குறைவாயிருப்பினும், அச்செக்கை ஒரு பாங்கு கண்ணியப்படுத்தி, அந்த வாடிக்கைக்காரருக்கு அளிக்கும் உதவியின் பயனால் ஏற்படுவதே அதிகப் பற்றாகும். ஒரு பாங்கு, சில காரணங்களை முன்னிட்டு, ஒருவருக்கு அதிகப் பற்று அளிப்பதாக ஏற்றுக் கொண்டாலன்றி, வரவுக் கணக்கிற்கு மேற்பட்டுத் தயாரிக்கப் பட்ட செக்குகளைக் கண்ணியப்படுத்தவேண்டிய கட்டாயமில்லை. சில சமயங்களில் ஒரு பாங்கு தன் வசமுள்ள பொருள்களின் உரிமைப் பத்திரங்களின் ஆதரவில், பொருள்களை இறக்குமதி செய்யும் ஒருவருடைய சார்பாக, ஏற்றுமதி செய்பவர் தம்மேல் தயாரிக்கும் மாற்று உண்டியல்களை அங்கீகரிக்க ஏற்றுக் கொள்வதுண்டு. இது வாணிபத்தில் ஏற்படும் ஒரு நம்பிக்கை நடவடிக்கையே யன்றி அதிகப் பற்றாகாது. ஜி. சௌ.

அதிகாரப் பிரிவினை : மக்கள் சுயேச்சையும் சுவாதீனமும் அனுபவிக்கும் ஜனநாயகக் குடியரசாட்சிக்கு அதிகாரப் பிரிவினை அடிப்படையானது என்று முதன் முதலில் தெளிவாக விவரித்தவர் மான்டெஸ்க்யூ (1689-1755) என்னும் பிரெஞ்சு அறிஞர். 1789-ஆம் ஆண்டில் தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் முதல் அறிகுறிகள் அப்போதே தோன்றத் தொடங்கின. அத்தகைய புரட்சியினாலுண்டாகும் தீங்குகள் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்று தோன்றவே, புரட்சியில்லாமல் சமாதான முறைகளிலேயே மக்களுக்குச் சுதந்தரம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு ஆராய்ச்சி செய்ததன் பயனாக, இவர் 1748ஆம் ஆண்டில் சட்டங்களின் சாராம்சம் (Spirit of the Laws) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இங்கிலாந்தின் அரசியலைப் பாராட்டி, அவ்வரசியலின் முக்கியமான அமிசமானது நிருவாகம், சட்டமியற்றும் ஸ்தாபனம், நீதி இலாகா என்ற மூன்று பகுதிகளுக்குள் அதிகாரப் பிரிவினை தான் என்று விளக்கினார். 18 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு மக்களின் நிலைமை 17ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து மக்களின் நிலைமை மாதிரிதான் என்றும், எப்படி ஆங்கிலேயர்கள் அதிகாரப் பிரிவினையால் சுயேச்சை யடைந்தார்களோ, அம்மாதிரியே பிரெஞ்சு மக்கள் அம்முறையையே கையாண்டு அரசியலைத் திருத்தி அமைத்துச் சுயேச்சையடைய முயல வேண்டுமென்றும் கூறினார். இவரைப்போலவே 20 ஆண்டுகளுக்குப் பின் வந்த ஆங்கிலப் பிரபல சட்ட நிபுணரான பிளாக்ஸ்டன் என்பவரும் இங்கிலாந்தின் அரசியலை மதிப்பிட்டார். ஆயினும், அவர் காலத்திய இங்கிலாந்து அரசியலில் கொள்கைக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு இருந்தது. அரசாங்கத்தின் மூன்று பகுதிகளுக்குள் அதிகாரப் பிரிவினை தான் முக்கியமாகக் கருதப்படினும், நடைமுறையில் மூன்று பகுதிகளுக்குமிடையே வெளிப்படையாகத் தோன்றாத ஓர் இணைப்பு இருந்து வந்தது. அதனால் இவ்வறிஞர் அதிகார உறைவிடங்களுக்குள்ளே பூரணமான பிரிவினை இருக்க வேண்டுமென்று கருதினாரா, அல்லது சில கட்டுப்பாட்டுக் குட்பட்ட பாகுபாடு வேண்டுமென்று கருதினாரா என்பது ஒரு முக்கியப் பிரச்சினை. அவர் எழுதியிருப்பதிலிருந்தும், எடுத்துக்காட்டும் உதாரணங்களிலிருந்தும் பூரணமான அதிகாரப் பிரிவினையையே ஆதரித்தார் என்று நினைக்க ஆதாரமில்லை.

மான்டெஸ்க்யூ தம் கொள்கையைத் தாமே பின் வருமாறு விளக்கியிருக்கிறார்: சட்டமியற்று மதிகாரமும் நிருவாக அதிகாரமும் ஒருவரிடத்திலோ, ஒரு குழுவினிடத்திலோ (Body of Persons) சேர்ந்திருந்தால், சுதந்திரம் (Liberty) இல்லாமற்போகும். நீதி வழங்கும் அதிகாரமும் சட்டம் இயற்றும் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டிருந்தால், மக்களின் உயிர்நிலையும் சுயேச்சையும் யதேச்சாதிகாரத்துக்குட்பட்டுவிடும். நீதி வழங்கும் அதிகாரம் நிருவாக அதிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் நீதிபதி கொடுமையான முறையில் நடந்துகொள்ளக்கூடும் என்ற அச்சம் ஏற்படும். முக்கியமாக நிருவாக அதிகாரமும் சட்டமியற்றுமதிகாரமும் பிரிக்கப்படவேண்டுமென்பதே அவருடைய போதனை. சட்டமியற்றும் ஸ்தாபனம் இரண்டு சபைகளடங்கியதாக இருக்கவேண்டும். இக்கொள்கை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் திட்டத்திலும் புரட்சிக்குப் பிறகு நிறுவப்பட்ட பிரெஞ்சு அரசியல் திட்டத்திலும் முக்கியமான அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. ஆனால், பிரான்சில் 1875ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் திட்டத்தில் இக் கொள்கை கைவிடப்பட்டது.

அமெரிக்க அரசியலமைப்பின் முக்கியமான அமிசம் இன்றும் இக்கொள்கையைப் பின்பற்றியே யிருந்து வருகிறது. சட்ட சபைகள் சட்டங்கள் இயற்றுகின்றன; அரசாங்கத்தை நடத்தும் நிருவாகப் பகுதி சட்டங்களை நிறைவேற்றுகின்றது. நீதி இலாகாச் சட்டங்களுக்கு உரை செய்து, அதன்முன்னே வரும் வழக்குக்களைத் தீர்த்துவைக்கின்றது. அரசாங்கத்தின் மூன்று பகுதிகளும் தனித்தனியானவை. ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம், எந்தப் பகுதியும் மற்ற இரு பகுதிகளையும் யதேச்சாதிகாரமாக ஆள முடியாமல் பாதுகாக்கிறது. ஒரு பாகம் மற்றப் பாகத்தை வரம்புமீறி நடந்து கொள்ளாமலிருக்கும்படி இந்தச் சம அந்தஸ்து தடை செய்கிறது. ஜனாதிபதியும், அவருக்கு ஆலோசனை கூறுகிற மந்திரிகளும் சட்ட சபை அங்கத்தினர்களாக இருக்கக் கூடாது. பார்லிமெண்டுப் பொறுப்பாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகளில்