பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருணந்தி சிவாசாரியார்

198

அருணந்தி சிவாசாரியார்

இவர் அருளிய நூல்கள்: திருப்புகழ், திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில்விருத்தம் முதலியன. சே. த. இ.

அருணகிரிநாதர் தத்துவம்: அருணகிரியார் திருப்புகழ்மூலம் உபதேசிக்கும் பொருள் யாது ? அவர் வழிபடும் முருகன் யார்? கடவுளை அறியும் வழி என்ன? மும்மூர்த்திகளும் தானாகி, அவர்க்குமேலுமாகி, எல்லாமுமாகி நின்ற தத்துவமுமே முருகன் என்று அவர் கூறுகின்றார். எல்லாத் தெய்வங்களும் முருகன் என்பதே அவர் துணிபு.

அருணகிரியார் திருமால் மருகனென முருகனைப் பலவிடங்களிலும் பாடியிருத்தலின் சைவ வைணவ சமரச நோக்கமுடையவராவார். அதுபோலவே புராண இதிகாசங்களையும் அவைகளில் கூறப்படும் கடவுளையும் தத்துவங்களையும் சமரசமாய்க் கையாண்டு பாடியிருக்கின்றார். கந்தபுராணத்தில் காணப்படும் கந்தப்பெருமானுடைய திருவிளையாடல்களை அனுபவித்த முறையில் வைத்துத் திருப்புகழில் மிகுதியாகப் பாடியிருக்கின்றார். சிவயோகத்தையும் அதை நாடும் ஜீவனுடைய தத்துவத்தையும் நன்றாக விளக்கியிருக்கிறார். 'ஐந்து பூதமும் ஆறு சமயமும்' என்னும் திருப்புகழில் ஆன்மாவானது ஆணவம் முதலான மும்மலத்தை யொழித்துத் தெய்வத்தை யடையவேண்டிய நெறியைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆசைகளும் ஆணவமும் அடங்கப் பெற்றாலன்றி முருகனை அணுகமுடியாதென்கிறார். ஆசையை அகற்றினாலன்றி வினை தீராது; மூண்ட வினையே விதியாகும்; விதியைத் தாண்டுவதே கதி; அந் நற்கதியைப் பெறவேண்டுமானால் முருகன் நாமமும் முருகன்பால் பக்தியும் இன்றியமையாத நெறி என்று கூறுகிறார்.

அவர் வேதம், உபநிஷதம், ஆகமம், புராணம் முதலியவைகளில் குறிப்பிட்டுள்ள அரிய நுட்பங்களைத் தெரிந்து, இசைத்தமிழ்ப் பாடல்களாகப் பாடி, யாவரும் அறிந்து ஒழுகக்கூடியவாறு எளிதான அறநெறியைக் காட்டியிருக்கின்றார். இவருடைய இத்தகைய உயர்வை எண்ணியே, தாயுமானவர்,

'ஐயா அருணகிரியப்பா உனைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்?'

என்று அருணகிரியாரைப் பற்றி உணர்ச்சி ததும்பப் போற்றுகிறார். பார்க்க: திருப்புகழ். டி. எம். கி.

அருணந்தி சிவாசாரியார் : சைவசந்தானாசாரியர்களுள் இரண்டாமவராகக் கருதப்படுகின்ற அருணந்தி சிவாசாரியார் ஆதிசைவ மரபைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சதாசிவாசாரியார் என்று கூறப்படுகிறது. சைவாகமங்கள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றைப் பிறர்க்கு ஓதிவந்தமையால் இவருக்குச் சகலாகம பண்டிதர் என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது: இவர் நடு நாட்டிலே பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள திருத்துறையூரில் வாழ்ந்து வந்தவர். இவர் காலம் பதின்மூன்றாவது நூற்றாண்டு என்று அறியக்கிடக்கிறது. முதலில் இவர் மெய்கண்டார்க்குக் குலகுருவாயிருந்ததும், பின்பு அவருக்கு முதல் மாணவரானதும் மெய்கண்டார் வரலாற்றில் காணலாகும். அருணந்தி என்ற பெயர் இவருக்கு மெய்கண்டாரால் இடப்பெற்றது.

தம் ஆசிரியர் ஏவலுக்கேற்ப அருணந்தி சிவஞான போதத்தை முதல் நூலாகக் கொண்டு, அதன் வழிநூலாகத் தாமியற்றிய சிவஞான சித்தியாரில் சைவத்திறத்தினை விளக்குகிறார். சித்தியார், சித்தாந்த சாத்திரங்களுள் மிக விரிவான நூல்; பரபக்கம், சுபக்கம் என்னும் இருபெரும் பகுதிகளைக் கொண்டது. உலகாயதன், சௌத்திராந்திகன், யோகாசாரன், மாத்தியமிகன், வைபாடிகன், நிகண்டவாதி, ஆசீவகன், பட்டாசாரியன், பிரபாகரன், சத்தப் பிரமவாதி, மாயாவாதி, பாற்கரியன் (பரிணாம மாயாவாதி), நிரீச்சுர சாங்கியன், பாஞ்சராத்திரி என்ற புறச் சமயத்தவருடைய கொள்கைகளை முதலில் கூறி, அப்புறச் சமயங்களைச் சித்தாந்தத்தால் மறுப்பது பரபக்கம். சித்தாந்த சாத்திர நூல்களுள் சித்தியார் ஒன்றில் மட்டுந்தான் அளவை கூறப் பெற்றிருக்கிறது. தத்துவ சாஸ்திரங்கள் முதலில் அளவை கூறுவது மரபு. நிறுத்த முறையில், காட்சி, கருதல், உரை போன்றவற்றுள் எவை தமக்கு உடன்பாடு என்று கூறி, அவற்றைக் கொண்டு தம் கொள்கைகளை நிலை நிறுத்தல் எல்லாச் சமயங்களுக்கும் ஒப்பமுடிந்த கொள்கை. சித்தியார் சுபக்கத்தில் அளவை கூறியபின், கடவுள், உயிர், கட்டு (பதி, பசு, பாசம்) இவற்றின் உண்மை, இவற்றின் பொது இயல்பு விடுபட்டுக் கடவுளை சிறப்பியல்பு, கட்டினின்றும் அடையவேண்டிய வழிகள், கடவுளை அடைந்தோர் தன்மை முதலியன கூறுகிறார். சமயத் துறையில் மட்டுமன்றி, இலக்கியத் துறையிலும் சித்தியார் மிக உயர்ந்த நூலாகத் தமிழ் அறிஞர்களால் பாராட்டப்பெறுகிறது.

அருணந்தி இயற்றிய மற்றொரு நூல் இருபாவிருபஃது என்னும் பெயருடையது. இந்நூல் பத்து வெண்பாவும் பத்து அகவலுமாக இரண்டுவகைப் பாவால் அமைந்துள்ளதால் இருபாவிருபஃது என்னும் பெயர்பெற்றது. ஆசிரியரை முன்னிலைப்படுத்தி மாணவன் வினவுவதாகவும், வினாவுக்கு ஆசிரியர் விடையளிப்பதாகவும் அமைந்துள்ளது இந்நூல். ஆசிரியர் கூற்றாக உள்ளனவே சித்தாந்த உண்மைகள்.

அருணந்தி இயற்றிய நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் சித்தாந்த உண்மைகள் வருமாறு:

1. இறைவன் உண்டு: ஒருவன், ஒருத்தி, ஒன்று என்று உலகம் முத்திறப்பட்டுத் தோன்றி, நின்று, அழிவதால் அதை இயற்றியவன் ஒருவன் உண்டு. அவனே இறைவன்.

2.உயிர் உண்டு, உயிர் பல : உயிர் என்பது உடலின் வேறாக, அறிவு, விழைவு, செயல் என்னும் மூன்றை உடையது. 'உயிர் ஒன்று' என மறைகள் கூற, 'உயிர் பல' எனக் கொள்ளுவது எவ்வாறு பொருந்துமெனின், மறைகள் உயிர்க்குத் தலைவன் ஒருவனே என்பதை வற்வற்புறுத்த 'உயிர் ஒன்று' எனக் கூறுகின்றன. எழுத்துக்கள்தோறும் செல்லும் அகரம்போல உயிர்களோடு சிவனும் சேர்ந்து நிற்கிறான்.

3. கட்டு: (i) இருவினை: உயிர்கள் நுகரும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் இருவினை. இருவினையால் உயிர்கள் பிறந்து இறந்து இவ்வுலகத்திற்கு வருவதும் இங்கிருந்து போவதுமாகும்.

(ii) மாயை : உலகத்திற்கு முதற் காரணமாக அணுக்களைக் கொள்ள முடியாது. அவைகள் அவயவப் பகுப்புடையனவாதலால் பகுப்பின்றியுள்ள மாயையே முதற் காரணம்.

(iii) ஆணவம்: ஒன்றாயிருந்தும், அநேக சக்தியுடையதாய்த் தொடக்கம் அற்றதாய், உயிரின் அறிவொடு தொழிலை ஆர்த்து, செம்பினிற் களிம்பு போன்று உயிரோடு இயைந்து நின்று அறியாமை காட்டுவது ஆணவம்.

இவை மூன்றும் உயிர்க்குத் தளை. நெல்லுக்கு முளை, தவிடு, உமிபோல இவை மூன்றும் உயிரின் உண்மை வடிவை மறைக்கின்றன.

4. மானுடப் பிறவியின் நோக்கமும் அருமையும்: இறைவன் பணிக்காக மானுடப் பிறவி எய்துகிறது.