பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

667

இந்தியா

தகர்க்க முகம்மதியர் புகுந்தனர். 1294-ல் யாதவர்களை அலாவுதீன் கில்ஜி தோற்கடித்தான். பிரதாபருத்திரனை மாலிக்காபூர் 1309லும், குஸ்ருகான் 1318லும், உலுக்கான் 1321 லுமாகப் பன்முறை புறங்கண்டனர். வீரபல்லாளன் முகம்மதியர்களோடு பன்முறை போர் புரிந்து இறுதியில் தோல்வியே கண்டான்.

1342-ல் மதுரையிலிருந்த சுல்தான் கயாசுத்தீன் என்பவன், 80 ஆண்டுகள் ஆண்டு, உடலும் மனமும் தளர்ந்திருந்த III-ம் வீரபல்லாளனைப் போரில் தோற்கடித்துச் சிறை பிடித்து, உயிரோடு அவன் தோலை உரித்துவிட்டான். மூன்றாம் வீரபல்லாளன் மகன் நான்காம் வீரபல்லாளன் போரைத் தொடர்ந்து நடத்தினான் எனினும் 1346-ல் அவனும் தோற்றான். இதனோடு ஹொய்சளர்களுடைய ஆதிக்கம் ஒருவாறு ஒடுங்கிற்று.

முகம்மது-பின்-துக்ளக்கின் தென் இந்தியப் படையெடுப்பு தென் இந்திய இந்துக்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவித்தது ; இந்து ஒற்றுமை விஜயநகர இராச்சியத்திற்கு அடிகோலிற்று. 1336-ல் துங்கபத்திரைக் கரையில் நிறுவப்பெற்ற விஜயநகரத்தின் தோற்றத்தைப் பற்றிப் பலவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. ஹொய்சளர்களிடமோ அன்றிக் காகதீயர்களிடமோ ராணுவ அதிகாரிகளாக இருந்த ஹரிஹரன், புக்கன் என்னும் இரு வீரர்கள் வித்தியாரணிய முனிவருடைய அருளால் விஜயநகர இராச்சிய ஸ்தாபனம் செய்தனர். முகம்மதியர் மேலும் தென்இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதைத் தடுக்கவே இவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது தெளிவு. இவர்கள் எண்ணம் சில நூற்றாண்டுகள் வரையில் பலித்தது.

புக்கனுடைய மகனான இரண்டாம் ஹரிஹரனே (1376 1404) விஜயநகரத்தின் முதல் ‘சுதந்திரப் பேரரசன்,’ இவன் தனது இராச்சியத்தைத் தெற்கே பரவச் செய்தான். இவ்வாறு பரவிய இராச்சியத்தை ஆறு மாகாணங்களாகப் பிரித்தான். வேதத்திற்கு உரை கண்ட சாயனர் இவனுடைய குருவாயும் மந்திரியாயும் இருந்து பல உதவிகள் புரிந்தார். இரண்டாம் தேவராயன் பட்டத்திற்கு வந்ததும் அவன் தனது பெரும்படையில் முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினான். இவனுடைய ஆட்சியில் விஜயநகர முதல் வமிசம் (சங்கம வமிசம்) தனது ஆதிக்கச் சிகரத்தை எட்டிற்று. லக்கண்ணா, மாதண்ணா என்னும் மந்திரிகள் இவனுக்குப் பேருதவியாயிருந்தனர். இவன் காலத்தில் இங்கு வந்த அப்துர் ரசாகு என்னும் பாரசீகத் தூதுவர் இவ்விராச்சியத்தின் பெருமைக்குச் சான்று கூறுகின்றான். ஆனால் தேவராயனன் சந்ததியாரின் காலத்தில் நிருவாக பலம் குறைந்தது. சாளுவ நரசிம்மனுடைய ஆதிக்கம் தொடங்கியது. விரூபாட்சன் காலத்தில் சாளுவன் அதிக வன்மையடைந்தான்; 1485-ல் விரூபாட்சன் கொலையுண்ட பிறகு சாளுவ நரசிம்மன் விஜயநகரப் பேரரசனானான்; இதிலிருந்து விஜயநகரத்தின் இரண்டாம் வமிச ஆட்சி தொடங்கிற்று.

சாளுவ நரசிம்மனுடைய எட்டாண்டு ஆட்சி சாம்ராச்சியத்தை மிகவும் பலப்படுத்திற்று. சாம்ராச்சியம் முன்பு இழந்த பிரதேசங்களைத் திரும்பவும் கைப்பற்றிற்று; இவனைச் சுற்றி நரச நாயக்கன், நாகம நாயக்கன், ஆரவீடிபுக்கன் முதலியவர்கள் எப்போதும் இருந்தனர். இச் சாளுவ நரசிம்மனுடைய மக்கள் திம்மரசு, இம்மடி நரசிம்மன் என்பவர்கள். முதலாமவன் பட்டமெய்திச் சில தினங்களில் கொலையுண்டிறக்கவே, இம்மடிநரசிம்மன் பட்டத்திற்கு வந்தான். அவன் காலத்தில் நரச நாயக்கன் என்னும் தலைவனுடைய ஆதிக்கம் ஓங்கி அவன் பட்டமெய்தினான். 1507-ல் நரச நாயக்கன் இறக்கவே, வீரநரசிம்மன் பட்டமெய்தி 1509 வரை ஆண்டான். இவனுக்குச் சாளுவ திம்மன் அமைச்சனாயிருந்தான்.

1509-ல் பட்டத்திற்கு வந்த கிருஷ்ணதேவராயர் விஜயநகர வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இவர் பட்டத்திற்கு வந்தகாலத்தில், ஒரிஸ்ஸா மன்னர் ஆதிக்கம் ஓங்கியிருந்தது; பிஜாப்பூர் அருகே பகைமன்னர் வலுத்திருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணதேவராயர் ஓராண்டு விஜயநகரிலேயே தங்கி இராச்சியத்தின் செல்வ நிலையைச் சீர்திருத்தினார்; பிறகு திக்குவிசயம் தொடங்கித் தமது சாம்ராச்சியத்தை நிறுவினார். உம்மத்தூர் தலைவனிடமிருந்து சிவசமுத்திரத்தையும், கிழக்கே ஒரிஸ்ஸா மன்னனிடமிருந்து உதயகிரி, கொண்டவீடு, கொண்டபள்ளி ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்; ஒரிஸ்ஸா மன்னனுடைய மகளையும் மணந்துகொண்டார். 1520-ல் ராய்ச்சூரில் பிஜாப்பூரைத் தோற்கடித்ததே அவருடைய சிறந்த வெற்றியாம். பின்னர் கிருஷ்ணதேவராயர் பிஜாப்பூரை அடைந்து குல்பர்கா இராச்சியத்தையும் அடக்கினார். தம் மந்திரி சாளுவ திம்மனுடைய உதவியைக் கொண்டு இவர் விஜயநகர மக்களின் நலத்தை வளர்த்தார். இவர் புலவராயும் புரவலராயும் இருந்தார். மிக அழகிய கோயில்கள் பலவற்றைக் கட்டுவித்திருக்கிறார்.

கிருஷ்ணதேவராயர் 1525-ல் தம் ஆறு வயது மகன் திருமலைராயனிடம் இராச்சியத்தை ஒப்படைத்துவிட்டுத் தாம் அவனுக்கு மந்திரியாயிருந்தார் என்றும், திம்மனுடைய மகன் இத்திருமலைராயனை விஷம் கொடுத்துக் கொன்று விட்டான் என்றும், அக்குற்றத்துக்குச் சாளுவதிம்மனும் அவன் மகனும் ஆகிய இருவரும் சிறையிலிடப்பட்டனர் என்றும் நூனிஸ் என்னும் போர்ச்சுக்கேசியர் குறித்துள்ளார். ஆயினும் இவ்விவரங்களுக்கு இவர் குறிப்புக்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை. கிருஷ்ணதேவராயர் 1529-ல் இறந்தார்; அவருக்குப் பின் அவர் சகோதரர் அச்சுத தேவராயர் பட்டத்திற்கு வந்தார்; அவருக்குப்பின் அரசுகட்டில் ஏறிய சதாசிவராயர் காலத்தில் அரசியல் பொறுப்பு அவர் மந்திரி ராமராயரிடம் இருந்தது; 1543-ல் அவர் அகமத்நகர், கோல்கொண்டா அரசர்களோடு சேர்ந்து கொண்டு பிஜாப்பூரை பகைத்துக் கொண்டார். பிறகு பிஜாப்பூரோடு நட்புப்பூண்டு, அகமத்நகரை பகைத்துக்கொண்டார். அகமத் நகரை ராமராயருடைய படைகள் அழித்தன. இதனின்று தமக்குள் ஒற்றுமை மிக இன்றியமையாதது என்பதை முகம்மதியர்கள் உணர்ந்துகொண்டனர். 1565-ல் பிஜாப்பூர், கோல்கொண்டா, பீடார் சுல்தான்கள் ஒன்றுபட்டு விஜயநகரை எதிர்த்தனர். அவ்வாண்டு தலைக்கோட்டை அல்லது ராட்சச தங்கடி என்னுமிடத்தில் நடந்த பெரும்போரில் முகம்மதியர்கள் வெற்றியடைந்தனர். இந்துக்களது ஆதிக்கத்தை அழிப்பதற்கு முஸ்லிம்கள் செய்த இறுதிப் பெருமுயற்சி இதுவே. விஜயநகரப்படை போரில் முதுகிட்டு ஓடி மறைந்தது; ராமராயர் முகம்மதியரால் கொல்லப்பட்டார். தலைக்கோட்டைப் போர் இந்துக்களது ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்துவிட்டது என்பது சிலர் கருத்து இன்னும் சிலர் இந்துக்களைத் தென்இந்தியாவில் தலை தூக்க முடியாதவாறு இப்போர் செய்துவிடவில்லை என்றும், இப்போருக்குப் பிறகு விஜயநகர நான்காம் வமிசம் ஆண்டதே இதற்குச் சான்று என்றும் கூறுவர்.