பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமநாதன், சர் பொன்னம்பலம்

66

இராமபாணம்

பிறவும் அவ்வூரார் அளித்து மேம்படுத்தினர் என்றும் அக்கல்வெட்டுக் கூறும் (சாசனத் தமிழ்க்கவி சரித்திரம்).

இராமநாதன், சர் பொன்னம்பலம் (1851- 1930) இலங்கை மக்களால் மிகவும் போற்றப்பட்ட பெரியார். இவர் கொழும்பு நகரில் செல்வரும் தரும சீலருமாயிருந்த பொன்னம்பல முதலியாருடைய புதல்வர். கலா விற்பன்னராக உலகப் புகழ்பெற்ற ஆனந்த குமாரசாமி இவருடைய தாய் மாமனாரான சர் முத்துக்குமாரசாமியின் புதல்வர்.

இராமநாதன் கொழும்பிலும் சென்னையிலும் கல்வி கற்றார். பிறகு கொழும்பில் உயர் நீதிமன்றத்து வழக்கறிஞரானார். அம்மன்றத்தின் தீர்ப்புக்களை இவர் வெளியிட்ட சிறந்த முறையைப் பாராட்டி, இங்கிலாந்து சட்ட வித்தியாபீடம் இவருக்குப் பாரிஸ்டர் பட்டத்தைப் பரீட்சையின்றியே வழங்கியது. இவர் 27ஆம் வயதில் சர் முத்துக்குமாரசாமிக்குப் பின் இலங்கைச் சட்டசபையில் தமிழர் பிரதிநிதியாக நியமனம் பெற்றார். அச்சட்டசபையில் இவர் 80ஆம் வயதில் இறக்கும்வரை இருந்து தொண்டாற்றினார்.

இவர் சொல்வன்மையும் அஞ்சாமையும் பெற்றவராய் விளங்கினார். இலங்கையில் எல்லா வகுப்பினரும் இவரை மதித்தனர். இவர் செய்த பல தொண்டுகளுள் யாழ்ப்பாணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படுத்தியது ஒன்று. இதன்பிறகு சில ஆண்டுகளாக சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருந்து பல நன்மையான சட்டங்களை நிறைவேற்றச் செய்தார். பௌத்த ஆலயங்களின் சொத்துப் பாதுகாப்புச் சட்டம் அவற்றுள் ஒன்றாகும்.

இந்தப் பதவியிலிருந்தபோது தஞ்சை இலக்கணம் இராமசாமிப் பிள்ளை என்ற சிவஞானியின் அருளால் யோக ஞானானுபவங்களைப் பெற்றார். மேற்றிசை நாகரிகப் போக்குக்களை விட்டுத் தமிழ் நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டார். கொழும்பில் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து கோயில் திருப்பணி செய்தார். தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் கற்றார். அமெரிக்க அறிஞர்கள் அழைப்பிற்கிணங்கி அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் சபைகளிலும் சமயச் சொற்பொழிவுகள் செய்தார்.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஹாரிசன் என்ற அம்மையார் இவருடைய வாழ்க்கைத் துணைவியரானார். இராமநாதன் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்காக இராமநாதன் கல்லூரியையும், ஆண்களுக்காகப் பரமேசுவரக் கல்லூரியையும் நிறுவினார். பகவற் கீதையைத் தமிழில் பெயர்த்து, அதற்குச் சைவசித்தாந்தபரமாக ஒரு விருத்தியுரையையும், திருக்குறட் பாயிரத்துக்கு இராமநாதீயம் என்ற விருத்தியுரையையும், செந்தமிழ் இலக்கணம், ஆத்திசூடி, மந்திர விளக்கம் என்னும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவர் ஆங்கிலத்தில் இயற்றிய நூல்களுள் முக்கியமானது மேற்றிசை நாடுகளில் ஆன்ம வித்தை (Culture of the Soul among Western Nations) என்பதாகும். இலங்கையில் மக்கள் சட்டசபைக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முதன்முதலாக 1910-ல் ஏற்பட்டது. ஆங்கிலங் கற்றவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பிரதிநிதி பதவியை இராமநாதன் ஒரு சிங்களப் பிரமுகருடன் போட்டியிட்டுப் பெற்றார். சட்டசபையிலிருந்து பல தொண்டுகள் ஆற்றினார். முதல் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் 1915-ல் இலங்கை தேசாதிபதியின் இராணுவச் சட்டத்தை இவர் எதிர்த்துச் சட்டசபையில் தொடர்ந்து 13 மணி நேரம் பேசினார். அது வெற்றி பெறாது போகவே இவர் இங்கிலாந்து சென்று வாதாடினார். அதன் பயனாக இலங்கைத் தேசாதிபதி அப்பதவியினின்றும் நீக்கப்பட்டார். இராமநாதன் கொழும்புக்குத் திரும்பிவந்தபோது சகல இன மக்களும் திரண்டு வந்து இவரை வரவேற்றுப் போற்றினார்கள். 1930-ல் இலங்கைத் தமிழர்களின் அரசியல் நிலையைப் பாதுகாத்தற் பொருட்டுக் கடைசி முறையாக இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பிவந்த பிறகு தமது 80ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். சு. ந.

இராமபாணம் (Lepisma) இறக்கையில்லாத பூர்வீகப் பூச்சி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பூச்சி. இப்பூச்சி, சுவர்களில் படங்களினடியிலும் மற்றவிடங்களிலும் வாழ்ந்து, புத்தகம், துணி முதலிய பொருள்களைக்

இராமபாணம்

1. முட்டைகள்
2. இளம் பூச்சி

3. முழுவதும் வளர்ந்த பூச்சி

கடித்துத் தின்று கேடு விளைவிக்கின்றது. வாய் உறுப்புக்கள் கடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. இப்பூச்சி வளர்ச்சிப் பருவத்தில் சிறப்பான உருவ-